பாஜக அலுவலக காவல் பணி! அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை! மூத்த தலைவரின் சர்ச்சை பேச்சு! பரவும் வீடியா
டெல்லி: பாஜக அலுவலகத்தின் காவலாளி பணியில் அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டு பணியாற்றி திரும்பும் அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
இந்தியாவின் முப்படைகளில் ஆள்சேர்ப்புக்காக அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராடி வருகின்றனர்.
பீகார், உத்தர பிரதேசம், தெலங்கானா செகந்திரபாத் உள்பட பல இடங்களில் போராட்டம் வன்முறையானது. ரயில்களுக்கு தீவைக்கப்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
”அக்னிபாத் வீரர்களுக்கு முடிதிருத்தம், சலவை பயிற்சி” - எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிய மத்திய அமைச்சர்
ஒதுக்கீடுகள் அறிவிப்பு
இதுபற்றி இளைஞர்கள் கூறுகையில், ‛‛4 ஆண்டு பணிக்கு பிறகு வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும். பழைய முறையிலேயே ஆள்சேர்ப்பு நடத்த வேண்டும்'' என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் மத்திய பாஜக அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி 4 ஆண்டு பணிக்கு பிறகு பாதுகாப்பு துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய உள்துறையில் துணை ராணுவப்படை மற்றும் அசாம் ரைபிள் பிரிவில் 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை பேச்சு
இந்நிலையில் தான் அக்னிவீரர்களுக்கு பாஜக அலுவலகத்தின் காவலாளி பணிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பாஜக தலைவர் ஒருவர் பேசியது சர்ச்சயைாகி உள்ளது. பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக இருப்பவர் கைலாஷ் விஜயவர்கியா. இவர் அக்னிபாத் திட்டம் குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர், ‛‛அக்னிபாத் நல்ல திட்டம். அக்னிவீரராக ஒருவர் 4 ஆண்டுகள் வரை பாதுகாப்பு படையில் பணி செய்யலாம். அதன்பிறகு அவர்கள் பணியில் இருந்து வெளியேறும்போது ரூ.11 லட்சம் வழங்கப்படுகிறது. அக்னிவீர் பேட்ஜ் வழங்கப்படும். பாஜக அலுவலகத்துக்கு பாதுகாப்பு பணிக்கு காவலாளிகளை அமர்த்த விரும்பினால் நான் அக்னிவீரர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன்'' என்றார்.
பரவும் வீடியோ
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கைலாஷ் விஜயவர்கியாவின் பேச்சுக்கு பல கட்சி தலைவர்களும், நெட்டிசன்களும் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சி, சிவசேனா, ஏஐஎம்ஐஏ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
ஆம்ஆத்மி-காங்கிரஸ் விமர்சனம்
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில், ‛‛நாட்டின் இளைஞர்கள் உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வில் வெற்றி பெற இரவு பகலாக கடினமாக உழைக்கிறார்கள். ராணுவத்தில் இணைந்து வாழ்நாள் முழுவதும் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காக தான் இதனை செய்கின்றனர். மாறாக பாஜகவில் காவலாளி பணிக்காக அல்ல. நாட்டு இளைஞர்கள் மற்றும் ராணுவத்தினரை கேவலப்படுத்த வேண்டாம்'' என கூறியுள்ளார். காங்கிரஸ் தரப்பில், ‛‛அக்னிபாத் திட்டம் குறித்த அனைத்து சந்தேகங்களையும் பாஜகவின் கைலாஷ் விஜயவர்கியா தீர்த்துவிட்டார்" என்றார்.
சிவசேனா-ஓவைசி
சிவசேனாவின் ராஜ்யசபா எம்பி பிரியங்கா சதுர்வேதி, ‛‛இத்தகைய பேச்சு இந்திய ராணுவ வீரர்களை சிறுமைப்படுத்தும் வகையில் உள்ளது'' என கவலை தெரிவித்துள்ளார். ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறுகையில், "ராணுவ பணியில் இருந்து திரும்பியவரை பாஜக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் அமர்த்துவோம் என பாஜக தலைவர் கூறுகிறார். மரியாதையும், மதிப்பும் அளிக்க வேண்டிய ராணுவ வீரர்களுக்கு மோடியின் கட்சி அளிக்கம் கண்ணியம் இதுதானா?. நாட்டில் இதுபோன்ற ஆளும் கட்சி இருப்பது வருத்தமளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.