தீவிரமடையும் அக்னிபாத் போராட்டம்! 12 ரயில்களுக்கு தீ வைப்பு.. பீகாரில் இணைய சேவை முடக்கம்.. பதற்றம்!
டெல்லி: அக்னிபாத் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், நாட்டில் பல்வேறு இடங்களிலும் வன்முறை வெடித்துள்ளது.
Recommended Video
மத்திய அரசு அக்னிபாத் என்ற புதிய ராணுவ புதிய ஆட்சேர்பு கொள்கையைச் சமீபத்தில் அறிவித்து இருந்தது. இத்திட்டத்தின் கீழ் 17.5 வயது முதல் 21 வயதுடையவர்கள் இணையலாம்.
அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் பணிபுரிவார்கள். அவர்களில் 25% பேர் மட்டுமே ராணுவத்தில் தொடர முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உஷார்!வலைதளங்களை உற்றுநோக்கும் உளவுத்துறை! அக்னிபாத் போராட்டத்தால் மாநிலங்களுக்கும் பறந்த உத்தரவு
போராட்டம்
இது குறித்து நாடு முழுவதும் விவாதம் எழுந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்களும் தொடங்கி உள்ளன. இதுவரை 10 மாநிலங்களில் அக்னிபாத் போராட்டம் நடைபெறுகிறது. பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்களும் தீ வைக்கப்பட்டன. முதலில் வட மாநிலங்களாகப் பீகார், உத்தரப் பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் மட்டும் தொடங்கிய இந்தப் போராட்டம் மெல்லத் தென் மாநிலங்களுக்கும் பரவியது.
தெலங்கானா
தெலங்கானாவில் உள்ள செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுகூடி, போராட்டம் நடத்தினர். அங்கிருந்த ரயில்களுக்கும் அவர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். அப்போது போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் வாரங்கலைச் சேர்ந்த 19 வயது இளைஞர் உயிரிழந்தார்.
இணைய சேவை முடக்கம்
அதேபோல பீகாரில் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள அம்மாநில துணை முதல்வர் ரேணு தேவியின் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது. இதுபோன்ற வன்முறை சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்றும் இதனால் சமூகத்திற்குத் தான் இழப்பு ஏற்படுகிறது என்றும் ரேணு தேவி தெரிவித்துள்ளார். போராட்டம் தீவிரமடைவதைத் தடுக்கும் வகையில் அங்கு சுமார் 12 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம்
உத்தர பிரதேசத்தில் இன்று காலை பல்லியா ரயில் நிலையத்திற்குள் நுழைந்த கும்பல் ரயில் பெட்டிக்கு தீ வைத்தனர். அதேபோல வாரணாசி, ஃபிரோசாபாத் மற்றும் அமேதி ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் வெடித்தது. அதில் அரசு பேருந்துகள் மற்றும் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. அலிகாரில் உள்ளூர் பாஜக தலைவர் ஒருவரின் கார் எரிக்கப்பட்டது.
ரயில்கள்
நாடு முழுவதும் குறைந்தது 12 ரயில்கள் தீவைக்கப்பட்டுள்ளன. மேலும், நாட்டில் 214 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.. 11 ரயில்கள் திசைதிருப்பப்பட்டன. அதேபோல 90 ரயில்கள் சென்று சேர வேண்டிய இடத்திற்குச் செல்லவில்லை. இதன் காரணமாக ரயில் பயணிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இளைஞர்கள் வன்முறை போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றும், ரயில்வேவின் சொத்துக்களைச் சேதப்படுத்த வேண்டாம் என்றும் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.