இன்னொரு விவசாயிகள் போராட்டமாக அக்னிபாத் எதிர்ப்பு- வட இந்திய போராட்டக்காரர்கள் டெல்லியில் முகாம்!
டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்த விவசாயிகள் போராட்டத்தைப் போல அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் என வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் முகாமிட்டுள்ளதால் தலைநகர் டெல்லியில் போராட்டம் மையம் கொள்ளக் கூடும் என்கின்றன செய்திகள்.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மெல்ல மெல்ல தலைநகர் டெல்லிக்கும் பரவியது.
டெல்லி எல்லைகளில் குவிந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ந் தேதி தங்களது போராட்டத்தைத் தொடங்கினர். டெல்லி எல்லைகளில் நெடுஞ்சாலைகளிலேயே கூடாரங்களை அமைத்து இந்த போராட்டம் தொடங்கப்பட்டது. விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறாமல் வீடு திரும்ப மாட்டோம் என்ற வைராக்கியத்துடன் போராட்டம் தொடர்ந்தது.

800 பேர் மரணம்
மத்திய பாஜக அரசும், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எந்த பலனும் இல்லை. விவசாயிகள் போராட்டம் கடும் பனி, உறைபனி, கொட்டும் மழை, கடும் வெயிலுக்கு நடுவே இடைவிடாமல் தொடர்ந்தது. இந்த போராட்ட காலத்தில் 800 விவசாயிகள் மாண்டு போயினர். ஆனாலும் போராட்டம் ஓயவில்லை. பல மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்த போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

வாபஸ் வாங்கிய மத்திய அரசு
இப்போராட்டத்தை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமலேயே ஒரு கட்டத்தில் மத்திய அரசு செயல்படத் தொடங்கியது. ஒருகட்டத்தில் வேறுவழியே இல்லாமல் மத்திய அரசு 3 விவசாய சட்டங்களையும் வாபஸ் பெற்றது. விவசாயிகளிடத்தில் பிரதமர் மோடி மன்னிப்பும் கேட்டார். விவசாயிகளின் இந்த போராட்டம் சுமார் ஓராண்டுக்கும் மேல் நீடித்தது. இந்திய அரசியல் வரலாற்றில் இது மகத்தான மக்கள் போராட்டமாக பதிவாகி உள்ளது.

அக்னிபாத் எதிர்ப்பு
இந்த வரிசையில் தற்போது அக்னிபாத் எனும் மத்திய அரசின் புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கைக்கு எதிரான போராட்டம் இணைய இருக்கிறது. ராணுவ பணியை 4 ஆண்டுகள் மட்டுமே வழங்க வகை செய்கிறது அக்னிபாத் திட்டம். இதற்கு எதிராக கடந்த ஒரு வாரகாலமாக வட இந்திய மாநிலங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. தென்னிந்தியாவிலும் அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்திருக்கிறது. அக்னிபாத் போராட்டத்தின் போது ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டன. ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. இதனால் வட இந்தியாவில் பெரும்பாலான ரயில் சேவைகள் முடங்கி உள்ளன.

டெல்லியில் முகாம்
இந்த போராட்டத்தில் காங்கிரஸும் இணைந்துள்ளது. இன்று அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் டெல்லி எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் வட இந்திய போராட்டக்காரர்கள் களமிறங்கி உள்ளதால் மற்றொரு விவசாயிகள் போராட்டமாக அக்னிபாத் உருவெடுக்கும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications