அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்களுக்கு பலன்; பொன்னான வாய்ப்பு: மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங்
டெல்லி: மத்திய அரசின் புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கையான அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்களுக்கு பலன் கிடைக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அக்னிபாத் திட்டமானது இளைஞர்களுக்கு பொன்னான எதிர்காலத்தை உருவாக்கக் கூடியது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் 3-வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. பீகாரில் 2 நாட்களாக தீ வைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. வட இந்தியாவின் பல மாநிலங்களும் போர்க்களமாகி உள்ளன.

தென்னிந்தியாவிலும் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் வேலூரில் நேற்று அக்னிபாத்துக்கு எதிராக போராட்டம் நடந்தது. இன்று தெலுங்கானாவின் செகந்திராபாத்தில் ரயில்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டன. ரயில் நிலையம் சூறையாடப்பட்டது.
இப்போராட்டங்களைத் தொடர்ந்து அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் இளைஞர்கள் சேருவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது. ஆனாலும் இளைஞர்களின் போராட்டம் ஓயவில்லை.
இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோர் இளைஞர்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அமித்ஷா தமது ட்விட்டர் பக்கத்தில், அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்கள் பெரும் பலன் அடைவார்கள்; இளைஞர்கள் நமது நாட்டுக்கு சேவை செய்யும் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவர் என்றார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தமது ட்விட்டர் பக்கத்தில், இளைஞர்களுக்கான பொன்னான வாய்ப்பை தரக் கூடியது அக்னிபாத் திட்டம். இதனால்தான் வயது வரம்பையும் 23 ஆக உயர்த்தி அறிவித்தார் பிரதமர் மோடி. ஆகையால் இளைஞர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு ராணுவத்தில் சேருவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications