வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு- செப். 25-ல் 'பாரத் பந்த்'- 250 விவசாய சங்கங்கள் அழைப்பு!
டெல்லி: மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக செப்டம்பர் 25-ந் தேதி நாடு தழுவிய பாரத் பந்த் நடத்த 250க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் உக்கிரப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக களத்தில் நிற்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

ஏற்கனவே வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசில் இருந்து சிரோமணி அகாலி தளம் வெளியேறியது. ஹரியானாவில் பாஜக கூட்டணி அரசுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமே அம்மாநிலங்களில் நடைபெற்று வரும் விவசாயிகளின் கிளர்ச்சிதான்.
ராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்ய ஞாயிறன்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்ட நிலையில் ராஜ்யசபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு எதிராக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உட்பட 13 எதிர்க்கட்சிகள் ராஜ்யசபா துணைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்துள்ளன.
இதனிடையே வேளாண் மசோதாக்களுக்கு எதிராக வரும் 25-ந் தேதியன்று நாடு தழுவிய அளவில் பந்த் போராட்டம் நடத்த 250க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தமிழகத்தில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் வரும் 28-ந் தேதி போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications