வீரர்கள் உயிரை காக்க உதவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.. இந்திய ராணுவத்தின் புது ஐடியா
டெல்லி: இந்தியா ராணுவம் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கு நேரடி முறையை விட செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வசதியை அதிகம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
இன்று காலை ராகுல் காந்தி பாதுகாப்பு துறை சார்ந்து சில கருத்துகளை தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு சில மணி நேரங்களுக்கு பின்னர் ராணுவம் தரப்பில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனா, இந்தியாவுடனான எல்லைப்பகுதியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தும் என இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரி பிரவின் சாவ்னி எழுதிய புத்தகத்தில் தெரிவித்திருந்தார். இந்த புத்தகத்திற்கு ராகுல் காந்தி எழுதிய முன்னுரை இன்று சர்ச்சையை ஏற்படுத்தி நிலையில் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.

பின்னணி
சில நாட்களுக்கு முன்னர் பூடான் எல்லைப்பகுதியில் சீனா தனது பலத்தை தொடர்ந்து அதிகரிக்கத்தொடங்கியது. குறிப்பாக டோக்லாம் எனும் பகுதியை குறிவைத்து இந்த கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. பூடானின் டோக்லாம் பீடபூமி என்பது புவியியல் ரீதியாக முக முக்கியமான பகுதி. அரசியல் வரலாற்றில் இது கோழி கழுத்துப் பகுதி என்றழைக்கப்படும். டோக்லாம் பீடபூமியை சீனா கைப்பற்றிவிட்டால் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளும் சீனா வசமாகிவிடும் என்பது பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து.

முக்கிய பகுதி
ஆகையால் டோக்லாம் பீடம்பூமியை இலக்கு வைத்து பல ஆண்டுகளாக சீனா காய்நகர்த்தி வருகிறது. 2017-ம் ஆண்டு டோக்லாம் பீடபூமியை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்தது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் டோக்லாம் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது. இப்பதற்றம் 73 நாட்கள் நீடித்தன. இந்நிலையில் டோக்லாமை அவ்வளவு எளிதாக விட்டுவிடப்போவதில்லை என சீனா கொக்கரித்துக் கொண்டிருக்கிறது. இந்த பகுதியில் உள்ள அமோ சூ நதிக்கரையில் பிரம்மாண்ட கிராமம் ஒன்றையே சீனா ராணுவம் தற்போது உருவாக்கி இருப்பதை செயற்கைக் கோள் வரைபடங்கள் அம்பலப்படுத்தி உள்ளன.

சீனாவின் நகர்வு
இந்த கிராமங்களில் பொதுமக்கள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றன. இந்நிலையில் தற்போது ராகுல் காந்தி எல்லைப் பிரச்னை குறித்து தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த எல்லைப்பிரச்னை குறித்து பிரவின் சாவ்னி எழுதிய The Last War: How AI Will Shape India's Final Showdown with China எனும் புத்தகத்தின் முன்னுரையில் ராகுல் காந்தி "இது சரியான நேரத்தில் வாசிக்கப்பட வேண்டி முக்கியமான புத்தகம்" என்று கூறியுள்ளார். இந்த புத்தகத்தில், ஒரு வேளை இந்தியாவின் லடாக், டோக்லாம் உள்ளிட்ட பகுதிகளின் மீது சீனா ஆக்கிரமிப்பு தாக்குதல் நடத்தினால் அதை 10 நாட்களில் வெற்றிகரமாக அவர்கள் முடித்துவிடுவார்கள் என எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் நகர்வு
இதற்கு அந்நாட்டு ராணுவம் பயன்படுத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறைதான் காரணம் என்றும் எழுத்தாளர் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் உயிரிழப்புகளை தவிர்த்து தாக்குதல்களை துல்லியமாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இது பாதுகாப்பு துறை வட்டாரங்கள் மட்டுமல்லாது மக்களிடையேயும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து "பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளுக்கு நேரடி முறையை விட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியை அதிகம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக" இந்திய ராணுவம் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலைநிறுத்தம்
மேலும், "சமூக வலைத்தளங்களை நேரலையில் கண்காணிப்பது, குற்றம் தொடர்பான ஏற்கெனவே கண்டறியப்பட்ட pattern எனப்படும் வழிமுறைகளை கணித்து புதிதாக குற்றம் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்வது உள்ளிட்ட வழிமுறைகளையும் எல்லைகளில் பின்பற்ற ராணுவம் திட்டமிட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நவடிக்கைகளுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் உளவுத்துறையை உருவாக்கவும் திட்டம் உள்ளது. அதேபோல சந்தேகத்திற்கிடமான வாகன நடமாட்டங்களை கண்டறிய இந்த தொழில்நுட்பம் எல்லைப்பகுதியில் சுமார் 8 இடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக" தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய ராணுவத்தை பொருத்த அளவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேலும் சிறப்பாக பயன்படுத்த ராணுவமும் DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து புதிய வழிமுறைகளை உருவாக்கி வருகிறது. இதற்காக, மிலிட்டரி காலேஜ் ஆஃப் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங்கில் ஒரு AI ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications