"அமித் ஷாவிடம் கூட்டணி நிலவரம் பற்றி பேசவில்லை”.. டெல்லியில் பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி
டெல்லி: "கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை. முதலமைச்சர் தவறான செய்தியை பரப்பி வருகிறார்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை ஆள டெல்லி முயற்சிப்பதாக அமித் ஷா பேசியதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக அண்மையில் தமிழகம் வந்திருந்தபோது, அவரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார்.

இதையடுத்து நேற்று சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக கூட்டணியில் பாமக இணைவதை உறுதி செய்தார். இதையடுத்து அவசர பயணமாக டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி. அங்கு நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த ஆலோசனையில், தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி கணக்குகள் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கட்சிகளுக்கான இடங்களை பகிர்ந்தளிப்பது குறித்து அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக-பாமக-பாஜக கூட்டணி அடுத்தடுத்து எடுக்கும் இந்த அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தை அனல் பறக்க செய்துள்ளன. இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் இபிஎஸ்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "அமித் ஷாவிடம் கூட்டணி நிலவரம் குறித்து எதுவும் பேசவில்லை. தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து என்னிடம் கேட்டறிந்தார். திருச்சி, புதுக்கோட்டைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தபோது என்னால் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. அதனால் தான் டெல்லிக்கு வந்து அவரை சந்தித்து இருக்கிறேன்.
யாருடன் கூட்டணி பேச்சுவார்த்தை என வெளிப்படையாகப் பேச முடியாது. வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கூட்டணியில் பல கட்சிகள் இணைய உள்ளன. எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும்.
டெல்லி தமிழ்நாட்டை ஆட்சி செய்யக்கூடாது என்பதுதான் எங்களது நிலைப்பாடும் கூட எங்களது கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை வகிக்கிறது. கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை. முதலமைச்சர் தவறான செய்தியை பரப்பி வருகிறார். தமிழகத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக வலுவான கூட்டணி அமைத்துள்ளோம். திமுகவை வீழ்த்தி 2026 -ல் அதிமுக ஆட்சி அமைக்கும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டோம் என ஏற்கனவே உறுதியாக கூறிவிட்டார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடமில்லை என பலமுறை சொல்லிவிட்டேன், அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா சேர்வதற்கு வாய்ப்பில்லை.
5.5 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு தான் திமுக ஆட்சியில் இருந்து இறங்கப் போகிறது. 75 ஆண்டுகள் இந்த நாட்டை பல கட்சிகள் ஆட்சி செய்திருக்கிறது இவ்வளவு கடன் வாங்கியது யாரும் கிடையாது தமிழ்நாட்டில் போதை நடமாட்டம் அதிகரித்துள்ளது கொலை கொள்ளை என சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப் போய் உள்ளது." எனத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications