இந்தியாவில் கொரோனா பாதிப்பு டிரெய்லர்தான்.. மெயின் பிக்சர் இனிதான்.. எய்ம்ஸ் இயக்குநர் பரபர பேட்டி
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் இன்னும் உச்சம் பெறவில்லை என எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். ஆனால் பல மாநிலங்களில் பல்வேறு காலங்களில் இது எப்போது வேண்டுமானாலும் உச்சத்தை அடையலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அந்த வைரஸ் முதலில் தோன்றியதாக சொல்லப்படும் சீனாவை காட்டிலும் அதிகமாகவே உள்ளது. கொரோனா ஹாட்ஸ்பாட் நாடுகளாக இருந்த இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை கடந்து இந்தியா பாதிப்பு எண்ணிக்கையில் முன்னேறி செல்கிறது.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் இன்னும் உச்சத்தை பெறவில்லை. தற்போதும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகள்
ஐரோப்பிய நாடுகளுடன் நாம் இந்தியாவை ஒப்பிடவே முடியாது. 2 அல்லது 3 ஐரோப்பிய நாடுகளின் மக்கள்தொகையை காட்டிலும் இந்தியாவில் மக்கள்தொகை அதிகம். ஆனால் இறப்பு சதவீதம் ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் இந்தியாவில் மிகவும் குறைவாகவே இருக்கிறது.

ஊரடங்கு உத்தரவு
டெல்லியில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளது. 4 பேரில் ஒருவருக்கு கொரோனா உறுதியாகிறது. டெல்லி மற்றும் மும்பையில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளது. 10 முதல் 12 நகரங்களில் இதற்கான வாய்ப்புகள் உள்ளன. சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்ட லாக்டவுன் வெற்றி கண்டுள்ளது. எனினும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் கணிசமாக குறையவில்லை.

அனுபவம்
ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றவில்லை. அவர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்க வேண்டியது முக்கியமானது. லேசான அறிகுறிகளுடன் உள்ளவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட தேவையில்லை. எங்கள் அனுபவத்தில் லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் அவர்களாகவே மீண்டு வருவர்.

குற்றச்சாட்டுகள்
அவர்களுக்கு சிகிச்சை தேவையில்லை. உடல்நிலை மோசமாக உள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். கொரோனா பாதித்த ஒருவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு விஐபிகளுக்கு மட்டுமே படுக்கை ஒதுக்க முடியும் என்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்.

ரன்தீப் குலேரியா
எங்கள் மருத்துவமனையில் விஐபி நோயாளிகளே இல்லை. நாங்கள் அனைத்து விதமான நோயாளிகளையும் அனுமதிக்கிறோம். தற்போது வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு 800 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications