அட்றா சக்க! "பறக்கும் கார்" 90 நிமிட பயணம் இனி 7 நிமிஷத்தில்.. 2026-ல் இந்தியா வரும் இ ஏர் டேக்சி?
டெல்லி: இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் அதிகரிகத்துக்கொண்டே வரும் நிலையில், வரும் 2026 ஆம் ஆண்டு டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இ - ஏர் டேக்சி சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்த தகவல்களை காணலாம்.
இந்தியா போன்ற மக்கள் தொகை நெருக்கம் அதிகம் கொண்ட நாடுகளில் பெரும் சவால்களில் ஒன்றாக இருப்பது இங்குள்ள போக்குவரத்து நெரிசல்தான். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் தனிநபர் வாகன பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதற்கு போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.

உலகிலேயே அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரங்களின் பட்டியலில் இரண்டாம் இடம் வகிக்கும் நகரம் பெங்களூர் தான். இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும். பெங்களூர் மட்டும் இன்றி சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலை பற்றி தனியாக சொல்ல தேவையில்லை.
இ - ஏர் டேக்சிகள்: அதுவும் பீக் நேரங்களில் சாலைகளில் எங்கு பார்த்தாலும் சாரை சாரையாக வாகனங்கள் அணி வகுத்து நிற்கும். சில கிலோ மீட்டர் துரங்களை கடப்பதற்கு கூட பல நிமிடங்கள் காத்துக்கிடக்க்க வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக இந்தியாவில் விரைவில் இ ஏர் - டேக்சி அறிமுகம் ஆக வாய்ப்பு உள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி ஏர்லைன் நிறுவனமான இண்டிகோவுடன் தொடர்புடைய நிறுவனமான இண்டர்குளோப் எண்டர்பிரைசஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம் இணைந்து இந்தியாவில் எலக்ட்ரிக் ஏர் டேக்சி சேவையை அறிமுகம் முடிவு செய்துள்ளன. சாலை வழி பயண சேவையுடன் போட்டி போடும் வகையில் மலிவான விலையில் இந்த இ - ஏர் டேக்சிகள் இயக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
4 பேர் பயணம் செய்யலாம்: இந்த நிறுவனங்களும் இந்தியாவில் ஏர் டேக்சி இயக்குவதற்கான ஒழுங்குமுறை அனுமதிகளை பெற வேண்டும். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா பெரு நகரங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுவால் திண்டாடி வரும் நிலையில், அதிகரித்து வரும் போக்குவரத்து தேவைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் இந்த நிறுவனங்கள் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளன.
கிறைஸ்லர்- பேரண்ட் ஸ்டெல்லாண்டிஸ் மற்றும் போயிங் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் ஆர்செர் ஏவியேஷன் நிறுவனம் மின்னணு வெர்டிகல் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் (eVTOL) ஏர்கிராப்ட்களை உருவாக்கி வருகிறது. மிட்நைட் இ ஏர்கிராப்ட் என்று ஆழைக்கப்படும் இந்த ஏர் டேக்சியில் ஒரு பைலட் உள்பட 4 பேர் பயணம் செய்யலாம்.
7 நிமிடத்தில் சென்று விடலாம்: 100 மைல்ஸ் தொலைவு வரை ஒரே நேரத்தில் பயணம் செய்யும் திறன் கொண்டது என சொல்லப்படுகிறது. முதலில் 200 ஏர்கிரப்ட்களுடன் இதன் சேவை தொடங்குவதை நோக்கமாக நிறுவனங்கள் கொண்டுள்ளன. டெல்லி, இந்தியாவின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பை, மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் இந்த சேவை முதலில் தொடங்கும் பிளான் உள்ளதாம்.
டெல்லியில் காரில் சென்றால் 60 முதல் 90 நிமிடங்கள் ஆகும் பயண தூரத்தை இந்த ஏர்டேக்சியில் வெறும் 7 நிமிடத்தில் சென்று விடலாம் என இதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது இந்த ஏர்டேக்சியை எளிதாக சொல்வது என்றால் பறக்கும் கார் என்றே சொல்லலாம். நின்ற இடத்தில் இருந்து அப்படியே டேக் ஆஃப் ஆகும் திறனும் அப்படியே லேண்டிங் ஆகும் திறனும் கொண்டதாக ஏர்டேக்சி இருக்கும் எனத் தெரிகிறது.
142 மில்லியன் டாலர்: இண்டிகோவின் தாய் நிறுவனமான இண்டர் குளோப் ஏவியேஷன் நிறுவனத்தில் 37 சதவீத பங்குகளை கொண்டுள்ள இண்டர் குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனம்தான் இந்த சேவையை இந்தியாவில் துவங்க திட்டமிட்டு இருக்கிறது. பயணிகள் சேவை மட்டும் இன்றி சரக்கு போக்குவரத்துக்கும் பயன்படுத்தும் திட்டத்தை இந்த நிறுவனம் வைத்துள்ளது.
மெடிக்கல், லாஜிஸ்டிக் பிசினசஸ் ஆகியவற்றிற்கு இது பயன்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க விமானப்படையுடன் கடந்த ஜுலை மாதம் 142 மில்லியன் டாலர் மதிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்ட ஆர்ஷெர் நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஏர் டேக்சி சேவையை அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications