விமான கட்டணம் ‘டபுள் மடங்கு’ தாறுமாறு உயர்வு.. டிரம்ப் முடிவால் விழிபிதுங்கிய இந்திய ஐடி ஊழியர்கள்!
டெல்லி: அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணங்களை விமான நிறுவனங்கள் கடுமையாக உயர்த்தியுள்ளன. டெல்லியில் இருந்து நியூயார்க் செல்ல ரூ.80 ஆயிரம் வரை கட்டணம் உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென H-1B விசாக்களுக்கான கட்டணத்தை உயர்த்தியதால் அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணம் வெகுவாக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணிபுரிவதற்காக வழங்கப்படும் ஹெச்1பி விசாவின் ஆண்டு கட்டணத்தை 1 லட்சம் டாலராக அதாவது இந்திய மதிப்பில் ரூ. 88 லட்சமாக உயர்த்தும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனால், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு பணிபுரிவதற்காக செல்லும் ஐடி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை பணியமர்த்த வேண்டுமென்றால், ஹெச்1பி விசாவுக்காக கட்டணம் செலுத்தும் நடைமுறை உள்ளது. ரூ. 1.32 லட்சமாக இருந்த ஹெச்1பி விசா கட்டணம் இந்திய மதிப்பில் ரூ. 88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஹெச்1பி விசா மீதான கட்டுப்பாடுகளை தொடர்ந்து, தற்போது அமெரிக்காவுக்கு வெளியே வசிக்கும் தங்கள் ஊழியர்கள், மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைய மறுக்கப்படுவதைத் தவிர்க்க 24 மணி நேரத்திற்குள் அமெரிக்கா திரும்ப வேண்டும் என்று பல முன்னணி நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
மேலும், ஹெச்1பி விசா மற்றும் எச்4 விசா வைத்திருப்பவர்கள் புதிய நடைமுறைக்கான விண்ணப்பங்கள் குறித்து புரிந்துகொள்ளும் வரை குறைந்தது இரண்டு வாரங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டும் என்றும் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை மின்னஞ்சல்கள் மூலம் கேட்டுக்கொண்டுள்ளன.
வெளிநாட்டவர்கள் இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்குள் அமெரிக்கா சென்றாக வேண்டும். அதன் பிறகு செல்பவர்களுக்கு புதிய நடைமுறைப்படி கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். எனவே குறைவான கால அவகாசமே இருப்பதால், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருப்பவர்கள், உரிய நேரத்தில் அமெரிக்காவுக்கு சென்று சேர சாத்தியமில்லை. டிரம்ப் அறிவிப்பு வெளியானதுமே, நகரங்களில் இருந்த பலர் உடனடியாக அமெரிக்காவுக்கு விமானங்களில் பயணிக்க புறப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்டுள்ள விமான நிறுவனங்கள், கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி உள்ளனர். வழக்கமாக டெல்லியில் இருந்து நியூயார்க் செல்வதற்கு விமான கட்டணம் 37 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். தற்போதைய நெருக்கடியை பயன்படுத்தி விமான நிறுவனங்கள், 70 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணங்கள் டபுள் மடங்கு அதிகரித்துள்ளதால் ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டிரம்ப் அறிவிப்பால் அமெரிக்க விமான நிலையங்களிலும் இன்று காலை பெரும் குழப்பம் ஏற்பட்டது. வெளிநாடு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தவர்கள் அவற்றை ரத்து செய்தனர். ஹெச்1பி விசாவில் அமெரிக்காவில் வசித்து வருபவர்கள் வெளிநாடு மற்றும் விடுமுறையில் செல்வதற்காக விமானங்களில் புறப்பட இருந்தனர்.
ஹெச்1பி விசா கட்டண உயர்வால் நிறுவனங்கள் அவசர மின்னஞ்சல்களை அனுப்பியதுமே, விமான இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள், அலறி அடித்துக் கொண்டு விமானங்களில் இருந்து இறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம், முன்கூட்டியே அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்காக கிளம்பிய பலருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications