ரயில் சேவை துவங்கியாச்சு.. அடுத்து விமானங்கள் பாய்ந்து பறக்கப்போகிறது.. ஏற்பாடுகள் ரெடி
டெல்லி: நாட்டில் நாளை முதல், குறிப்பிட்ட நகரங்களுக்கிடையே, ரயில் சேவைகள் துவங்க உள்ள நிலையில், மற்றொரு பக்கம் மே 17ஆம் தேதி லாக்டவுன் நிறைவடைந்து, அதற்குப் பிறகு விமான சேவையை இயக்குவதற்கு அரசு தயாராகி வருவதாகவும், இதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படக் கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் இயக்குனரகத்தில் அதிகாரிகள் இன்று குறிப்பிட்ட சில முக்கியமான விமான நிலையங்களுக்கு சென்று வணிகரீதியான விமானங்களை இயக்குவது தொடர்பாக நேரில் ஆய்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்கட்டமாக 25% அளவுக்கான விமான சேவையை மறுபடியும் துவங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு சில நிபந்தனைகள் இருக்க கூடும்.

குறுகிய தூர பயணங்கள்
2 மணி நேரத்துக்கும் குறைவான பயண நேரத்தை கொண்ட நகரங்களுக்கு இடையே விமான சேவை இயக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம். விமானத்தில் பயணிக்க விரும்புவோர் கண்டிப்பாக ஆரோக்கிய சேது ஆப்பை, தங்களது செல்போனில் டவுன்லோடு செய்து வைத்திருக்க வேண்டும். இது ரயில் பயணிகளுக்கு கட்டாயம் ஆக்கப்படவில்லை. ஆனால் டவுன்லோட் செய்தால் நல்லது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது. ரயில் பயணிகள் அனைவரும் ஸ்மார்ட் போன் வைத்து இருப்பார்கள் என்பது உறுதி இல்லை என்பதால் இவ்வாறு ஒரு முடிவுக்கு வரப் பட்டுள்ளது.

ஆரோக்கிய சேது ஆப்
விமான பயணத்திற்கு மேலும் சில நிபந்தனைகளும் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி விமானத்தில் உணவுகள் வழங்கப்படமாட்டாது. ஆரோக்கிய சேது ஆப் கட்டாயமாக்கப்படும். சமூக இடைவெளி பராமரிக்கப்படும். சேனிட்டைசர் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுத்துவது கட்டாயம். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்போருக்கு அனுமதி கிடையாது, என்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமாம்.

ரயில் பயணம்
நாளை முதல் டெல்லி ரயில் நிலையத்திலிருந்து திப்ருகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்மு தாவி ஆகிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
பின்னர், புதிய வழித்தடங்களில் மேலும் சிறப்பு ரயில் சேவைகளைத் தொடங்கும் வாய்ப்பும் இருக்கிறது.

டிக்கெட்டுகள்
அதேநேரம், ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் மூடப்பட்டிருக்கும், பிளாட்ஃபார்ம் டிக்கெட் உட்பட எந்த டிக்கெட்டும் ரயில் நிலையங்களில் வழங்கப்பட மாட்டாது. உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் உள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயம். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே ரயில்களில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications