மைக்ரோசாப்ட் பிரச்சினை.. 2வது நாளாக ஏர்போர்ட்களில் நீடிக்கும் பாதிப்பு.. மத்திய அரசு சொல்வது என்ன?
டெல்லி: மைக்ரோசாப்ட் கோளாறால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், இன்று நிலமை சற்று மேம்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவித்தனர். இது குறித்து நேற்று ஏற்பட்ட சிக்கல்கள் சரி செய்யப்பட்டு வருவதாகவும், பிற்பகலுக்குள் அனைத்து செயல்பாடுகளும் சீராகும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் நிறுவனம் திடீரென முடங்கியதால் உலகெங்கும் பல்வேறு சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் 40 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். மைக்ரோசாப்டின் 'விண்டோஸ்' இயங்குதளத்தை எண்ணற்ற நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில்தான், மைக்ரோசாப்ட் 'விண்டோஸ்' இயங்குதளத்தில் நேற்று திடீரென கோளாறு ஏற்பட்டது.

அதனால் அந்த மென்பொருளை சார்ந்துள்ள தொழில்நுட்ப சேவைகள் அனைத்தும் முடங்கின. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த பாதிப்பு உணரப்பட்டது. விண்டோஸ் உடன் இணைந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான க்ரவுட் ஸ்டிரைக் நிறுவனத்தின் அப்டேட் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதைச் சரி செய்யும் முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் சர்வர் கோளாறு உலகம் முழுவதும் எதிரொலித்தது. அமெரிக்காவில், யுனைடெட், அமெரிக்கன், டெல்டா ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பின்னர் படிப்படியாக நேற்று இரவு விமான சேவைகள் சீராக தொடங்கியதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.
இந்தியாவிலும் நேற்று விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஆகிய விமான நிறுவனங்களின் ஆன்லைன் செக்-இன், போர்டிங் ஆகிய பணிகள் முடங்கின. கணினிகள் முடங்கியதால் கைகளால் போர்டிங்க் பாஸ் எழுதி கொடுக்கப்பட்டன. இந்த நிலையில், 2-வது நாளாக இதன் தாக்கம் நீடிக்கிறது. நேற்றைய அளவுக்கு இல்லையென்றாலும் இன்றும் பயணிகள் சில சிரமங்களை சந்தித்து வருவதை பார்க்க முடியகிறது.
இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கூறுகையில், "நேற்று ஏற்பட்ட சிக்கல்கள் சரி செய்யப்பட்டு வருவதாகவும், பிற்பகலுக்குள் அனைத்து செயல்பாடுகளும் சீராகும்" எனக் கூறியுள்ளது. மேலும், விமான நிலைய செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ரத்தான விமானங்களுக்கான பயண கட்டணத்தை வழங்குவது, மாற்று ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை செய்து வருவதாகவும் விமான போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications