சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்துங்கள்- அகிலேஷ் பேச்சு! பாஜக தோல்வி அடைந்த அரசு என்றும் தாக்கு
டெல்லி: இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பேசிய அகிலேஷ் யாதவ், சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். மேலும், பெரும்பான்மையைப் பெறத் தவறிய இது தோல்வியடைந்த அரசு எனக் குறிப்பிட்ட அவர், அரசு போதியளவில் வேலைவாய்ப்புகளை அளிக்காததாலேயே பேப்பர் லீக் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
நாடாளுமன்றத்தில் இப்போது குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு தலைவர்களும் பங்கேற்றுப் பேசி வருகிறார்கள்.

அகிலேஷ் யாதவ்: நேற்றைய தினம் தான் இது தொடர்பாக ராகுல் காந்தி, ஆ ராசா உள்ளிட்டோர் பேசியிருந்தனர். அதில் நீட் விவகாரம் குறித்துப் பல கருத்துகளைத் தெரிவித்தனர். இதற்கிடையே இன்று நாடாளுமன்றத்தில் பேசிய சமாஜ்வாதி தலைவரும் எம்பியுமான அகிலேஷ் யாதவும் நீட் விவகாரம் குறித்துப் பேசினார். இளைஞர்களுக்குப் போதியளவு வேலைவாய்ப்பு இல்லாததாலேயே இதுபோன்ற பேப்பர் லீக் சம்பவங்கள் நடப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அகிலேஷ் யாதவ், "இதுபோல வினாத்தாள்கள் முன்கூட்டியே கசியும் சம்பவங்கள் ஏன் நடக்கிறது? இளைஞர்களுக்கு வேலை வழங்க அரசு தயாராக இல்லை. இதன் காரணமாகவே பேப்பர் லீக் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
வேலை இல்லை: இளைஞர்களுக்கு வேலை வழங்க தயாராக இல்லாத அரசு, ஏற்கனவே இருக்கும் வேலைகளையும் கூட பறிக்கின்றனர். அது இது எனச் சொல்லி அரசு வேலை வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள்" என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்ததாகத் தகவல் வெளியாகினது. இந்த விவகாரத்தில் சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல யுஜிசி-நெட் தேர்வும் ரத்து செய்யப்பட்டது.. டார்க் வெப் தளத்தில் வினாத்தாள்கள் கசிந்ததாகவும் இதன் காரணமாகவே நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதைக் குறிப்பிட்டே அகிலேஷ் யாதவ் பேசியிருந்தார்.
தோல்வியடைந்த அரசு: தொடர்ந்து இந்த முறை லோக்சபா தேர்தல் பாஜக குறைவான இடங்களில் மட்டுமே பெற்றுள்ளது குறித்துப் பேசிய அகிலேஷ் யாதவ், "பாஜக சீட்கள் குறைந்துள்ளன. அவர்களால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. இது "இந்தியா" கூட்டணிக்குக் கிடைத்த தார்மீக வெற்றி.. இது தோல்வியடைந்த அரசு என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
நாடாளுமன்றத்தில் முதன்முறையாகத் தோற்கடிக்கப்பட்ட அரசு இருப்பதை உணர்கிறேன்.. இந்த அரசு வேலைக்காகாது என்று மக்கள் சொல்கிறார்கள். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான சந்தேகம் இருக்கவே செய்கிறது. நான் உபி-இல் 80 இடங்களிலும் வென்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்ப மாட்டேன். நான் கடந்த காலங்களிலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பியது இல்லை. வரும் காலங்களிலும் நம்ப மாட்டேன்
ஜாதிவாரி கணக்கெடுப்பு: நாங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக இருக்கிறோம். உடனடியாக நாட்டில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.. அக்னிவீர் திட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும்.. பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்க சட்டப்பூர்வ உத்தரவாதம் அமல்படுத்தப்படவில்லை. அதற்கான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications