"இவர்களுக்கு" எல்லாம் ஜீவனாம்சம் கிடைக்காது.. டெல்லி ஐகோர்ட் மிக முக்கிய உத்தரவு! பின்னணி
டெல்லி: இந்தியாவில் ஜீவனாம்சம் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு ஒன்றைக் கொடுத்துள்ளது. அதாவது பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்போருக்கு ஜீவனாம்சம் வழங்கப்படாது என்று டெல்லி ஐகோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. ஜீவனாம்சம் என்பது சமூக நீதிக்கான ஒரு கருவி எனக் குறிப்பிட்ட டெல்லி நீதிமன்றம், அதை ஒருவர் செல்வம் சேர்க்கப் பயன்படுத்த முடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
ஜீவனாம்சம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனில் க்ஷேத்ரபால் மற்றும் ஹரிஷ் வைத்யநாதன் ஷங்கர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. ஜீவனாம்சம் கோருபவர்கள் தங்கள் நிதித் தேவையைக் காட்ட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.. இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 25-ன் கீழ், பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்போருக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது என்று அவர்கள் கூறினர்.

ஜீவனாம்சம்
இது தொடர்பாக நீதிபதிகள் மேலும், "இந்து திருமண சட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருப்போருக்கு ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை" என தெரிவித்தனர். விவாகரத்து வழக்கு ஒன்றில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்த கருத்துகளைக் கூறியது. அதில் பெண்ணுக்கு நிரந்தர ஜீவனாம்சம் மறுக்கப்பட்டதோடு, அவரது கணவருக்குக் கொடுமைக்கான காரணங்களுக்காக விவாகரத்தும் வழங்கப்பட்டிருந்தது.
பின்னணி
அதாவது இந்த வழக்கில் கணவர் ஒரு வழக்கறிஞராக இருக்கிறார். அவரது மனைவி இந்திய ரயில்வே போக்குவரத்து சேவை பிரிவு A அதிகாரி. இருவரும் கடந்த 2010-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமான 14 மாதங்களுக்குள் இருவரும் பிரிந்தனர். மனைவி தன்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக கணவர் குற்றம் சாட்டினார். மேலும், உடலுறவு வைத்துக் கொள்ள மறுத்து மன ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அந்த பெண், தனது கணவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இது தொடர்பாக விவாகரத்து வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம் திருமணத்தை ரத்து செய்தது. விவாகரத்திற்காக மனைவி ரூ.50 லட்சம் கேட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், அதை குடும்பநல நீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு எதிராகவே அந்த பெண் மேல்முறையீடு செய்திருந்தார். மேல்முறையீட்டு மனுவிலும் டெல்லி ஐகோர்ட் ஜீவனாம்சம் தர தேவையில்லை என்றே கூறியுள்ளது.
சரியான முடிவுதான்
டெல்லி நீதிமன்றம் மேலும், "குடும்பநல நீதிமன்றம் எடுத்த முடிவு நியாயமற்றது என்று கூற முடியாது.. ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு சரியான முடிவாகவே இருக்கிறது. இந்த வழக்கில் கணவரை அந்த பெண் அவமானப்படுத்தியுள்ளார். கணவரையும் அவரது தாயையும் இழிவுபடுத்தியுள்ளார். இது மன ரீதியான கொடுமையாகக் கருதலாம்.
அந்த பெண் ஒரு மூத்த அரசு அதிகாரி, கணிசமான வருமானம் ஈட்டும் நபர். மேலும், இருவரும் குறுகிய காலம் மட்டுமே ஒன்றாக இருந்தது, குழந்தைகள் இல்லாதது, மனுதாரரின் நிதித் தேவைக்கான ஆதாரம் இல்லாதது ஆகியவை காரணமாக நிரந்தர ஜீவனாம்சம் தர தேவையில்லை.. எனவே, குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிடக் காரணங்கள் இல்லை" எனச் சொல்லி நிரந்தர ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முக்கியம்
இந்தியாவில் ஜீவனாம்சம் தொடர்பான வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி ஐகோர்ட்டின் இந்த உத்தரவு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் இப்படி தான் மும்பையைச் சேர்ந்த பெண் விவாகரத்து வழக்கில் வீடு, ரூ.12 கோடி பராமரிப்புத் தொகை மற்றும் BMW காரை ஜீவனாம்சமாக கோரியிருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "நீங்கள் இவ்வளவு படித்தவராக இருக்கிறீர்கள்... நீங்கள் யாருடைய உதவியையும் நாடாமல் உழைத்துச் சாப்பிட வேண்டும்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications