குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. ட்விஸ்ட் கொடுத்த அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர்!
டெல்லி: சிஏஏ அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதற்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இந்நிலையில், அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷகாபுதீன், சிஏஏ-வை வரவேற்பதாக கூறியுள்ளார்.
சிஏஏ என்ன சொல்கிறது?: கடந்த 1955ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச்சட்டத்தின்படி, இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்க அச்சட்டம் வழிவகுத்தது. அதில் திருத்தம் செய்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிக்கள், கிருத்துவர்கள் ஆகியோர் இந்நாட்டிற்கு வந்து குறைந்தது 6 ஆண்டுகள் வாழ்ந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்க தற்போது இப்புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் வழிவகுத்துள்ளது.

எதிர்ப்பு ஏன்?: இசுலாமியர்களை மட்டும் திட்டமிட்டுப் புறந்தள்ளிவிட்டு மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் திருத்தச்சட்டம் மூலம் இந்நாட்டின் அடித்தளமான மதச்சார்பின்மைக் கோட்பாடே முற்றுமுழுதாக துடைத்தெறியப்படும் என எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்தை விமர்சித்துள்ளன. இந்த சட்டத்தின் மூலம் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை தற்போது வழங்கப்படாது என்பதால், தமிழ்நாட்டில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு நிலவி வருகிறது.
போராட்டங்கள்: புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் உட்பட 16 கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் இன்று முழு அடைப்பு போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன. டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சர்ச்சை கருத்து: இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷகாபுதீன், இந்த சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "சிஏஏ சட்டத்தை நான் வரவேற்கிறேன். இதனை முன்னரே அமல்படுத்தியிருக்க வேண்டும். இந்த சட்டம் தொடர்பாக இஸ்லாமியர்கள் இடையே பல தவறான புரிதல்கள் உள்ளன. இந்த சட்டத்தினால், இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எனவே இந்திய முஸ்லீம்கள் இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதற்கு முன், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து மத ரீதியாக தூண்டப்பட்ட அங்கிருந்து இந்தியாவுக்கு வந்த இஸ்லாமியர்கள் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் எந்த சட்டமும் இருந்தது இல்லை. ஆனால், தற்போது சிஏஏ சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை தொடங்கி வைத்துள்ள நிலையில், அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சிஏஏ-வை வரவேற்றிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது. மவுலானா ஷகாபுதீன் ஏற்கெனவே ஹலால் தடைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications