உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் அதிரடி காட்டியவர்.. யார் இந்த புதிய சிபிஐ இயக்குநர் சுபோத் குமார்?
டெல்லி: மராட்டியத்தை உலுக்கிய ரூ.20 ஆயிரம் கோடி போலி பத்திர தெல்ஜி ஊழல் முதல் மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு வரை பல வழக்குகளை விசாரித்து அனுபவம் கொண்ட சுபோத் குமார் ஜெய்ஸ்வால், சிபிஐ புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
சிபிஐ இயக்குநராக இருந்த ரிஷிகுமார் சுக்லா கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வுபெற்றார். இதையடுத்து சி.பி.ஐ கூடுதல் இயக்குநர் பிரவீன் சின்ஹா கூடுதல் பொறுப்பாக இதைக் கவனித்து வந்தார்.
சுமார் மூன்று மாதங்களாகவே சிபிஐ, தனியாக இயக்குநர் இல்லாமல் இயங்கி வந்தது. கூடுதல் இயக்குநர் பிரவீன் சின்ஹாவே ஆக்டிங் இயக்குநராகவும் செயல்பட்டு வந்தார்.
சிபிஐ புதிய இயக்குநர்
இதற்கிடையே புதிய சிபிஐ இயக்குநரைத் தேர்ந்தெடுக்க பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து நேற்று சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் அடுத்த 2 ஆண்டுகள் சிபிஐ சிறப்பு இயக்குநராக பணியில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த சுபோத் குமார் ஜெய்ஸ்வால்
தற்போது மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரலாக இருக்கும் சுபோத் குமார் ஜெய்ஸ்வால், 1985ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரியாக ஆவர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 1962ஆம் ஆண்டு பிறந்த இவர், எம்.பி.ஏ படித்துள்ளார். முன்னதாக, சுபோத் குமார் முதன்மை ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (Raw) மற்றும் சிறப்பு பாதுகாப்புக் குழு (SPG) ஆகியவற்றிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேலும், பல்வேறு பயங்கரவாத விசாரணைகள் இவர் நேரடியாக மேற்கொண்டவர்.
போலி பத்திர தெல்ஜி ஊழல் வழக்கு
மகாராஷ்டிர காவல்துறை இயக்குநர் ஜெனரலாக பொறுப்பேற்பதற்கு முன், ஏராளமான உயர் அதிகாரிகளின் ஊழல் வழக்குகளை விசாரித்துள்ளார். சிபிஐ வசம் செல்வதற்கு முன்பு, மராட்டியத்தை உலுக்கிய ரூ.20 ஆயிரம் கோடி போலி பத்திர தெல்ஜி ஊழல் வழக்கையும் ஜெய்ஸ்வால் விசாரித்தார். இந்த ஊழலில் ஏராளமான முக்கிய அதிகாரிகளும்கூட சிக்கினர்.
மும்பை தாக்குதல்
மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் டிஐஜியாகவும் இருந்தவர் சுபோத்கமார். 2006ஆம் ஆண்டு மாலேகான் தொடர் குண்டுவெடிப்பு முதல் 2008இல் மும்பை தாக்குதல் வரை பல முக்கிய பயங்கரவாத தாக்குதல்களை விசாரித்ததில் இவரது பங்கு முக்கியமானது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா காவல் டிஜிபியாக சுபோத்குமார் நியமிக்கப்பட்டார், 2022ம் ஆண்டு வரை அவருக்கு டிஜிபியாக பதவிக்காலம் இருந்தது. இருப்பினும், அவரை மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் தலைவராகக் கடந்த சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார்.