விடாத மோடி.. ஸ்மார்ட் மூவ்.. முக்கிய துறைகளை தக்க வைத்துக்கொண்ட பாஜக.. கூட்டணிகளுக்கு சிறிய துறைகள்
டெல்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. நேற்று 72 எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில் இன்று இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இதில் முக்கிய இலாக்காக்களை பாஜக கையில் தன்னிடமே மீண்டும் வைத்துக்கொண்டிருக்கிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார். குடியரசுத் தலைவரும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததையடுத்து நிலையில், நேற்று மாலை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அவருடன் 72 எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையுடன் மோடி பதவியேற்றார். இந்நிலையில் தற்போது அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வழக்கம் போல இந்த முறையும் பாஜக முக்கிய துறைகளை தன் வசமே வைத்துக்கொண்டிருக்கிறது.
தற்போது வரை வெளியான அறிவிப்பின்படி, உள்துறை அமைச்சராக அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங், ரயில்வே துறை அமைச்சராக அஸ்வினி வைஷ்னவ், நிதித்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன், சாலை போக்குவரத்து துறை அமைச்சராக நிதின் கட்கரி, வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர்,பெட்ரோலிய துறை அமைச்சராக ஹர்தீப் சிங் பூரி, கல்வித்துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் சாகு ஆகியோர் தொடர்கின்றனர்.
வேளான் துறை சிவராஜ் சிங் சவுகானுக்கும், நீர் வளத்துறை சி.ஆர்.பாட்டீலுக்கும், மின்சாரத்துறை மனோகர் லால் கட்டாருக்கும், நாடாளுமன்ற விவகாரத்துறை கிரன் ரிஜுஜூவுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் எம்பி ராம் மோகன் நாயுடுவுக்கு விமான போக்குவரத்து துறையும், லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பஸ்வானுக்கு விளையாட்டுத்துறையும், இந்துஸ்தானி அவம் மோர்ச்சா கட்சியின் ஜிதன் ராம் மஞ்சிக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2014, 2019 லோக்சபா தேர்தலை போல இந்த தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்பிக்களின் ஆதரவுடன் மோடி பிரதமராகியுள்ளார். இந்த இரண்டு கட்சிகளிடம் 17+16 என 33 தொகுதிகள் இருக்கின்றன. இதை கழித்துவிட்டால் பாஜக கூட்டணிக்கு 260 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும். பெரும்பான்மை பெற 272 தொகுதிகள் வேண்டும். எனவே கூட்டணி கட்சிகளின் எம்பிக்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது.
இவர்களுக்கு முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோடி 2.O ஆட்சியில் இருந்ததை போலவே இந்த முறையும் முக்கிய துறைகள் பாஜக எம்பிக்களுக்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications