முடிவுக்கு வந்த இஸ்ரேல் - லெபனான் போர்.. அமெரிக்கா செய்த தரமான சம்பவம்.. இந்தியா சொன்ன மெசெஜ்
டெல்லி: கடும் பதற்றத்தை ஏற்படுத்தி வந்த இஸ்ரேல் - லெபனான் இடையேயான மோதல் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலையீட்டை தொடர்ந்து இருநாடுகள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில் இந்தியா அதனை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளது.
2023 அக்டோபர் 7 ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து அந்த நாட்டு மக்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர். இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போரை அறிவித்தார்.

காசா மீது வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போர் ஓராண்டை கடந்தும் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் என்பது ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பு. இதனால் போரை கைவிட வேண்டும் என்று இஸ்ரேலிடம், ஈரான் கேட்டு கொண்டது. ஆனால் இஸ்ரேல் அதனை கண்டுக்கொள்ளவில்லை.
இதனால் கோபமடைந்த ஈரான், இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்து வரும் லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் தனது ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா மூலம் குடைச்சல் கொடுக்க தொடங்கியது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. இதனால் இஸ்ரேல் - காசா போருக்கு நடுவே இஸ்ரேல் - லெபனானின் ஹிஸ்புல்லா இடையேயும் கடும் மோதல் நடந்து வந்தது.
இஸ்ரேல் ஹிஸ்புல்லாக்கள் மீது வாக்கி டாக்கி, பேஜர் வெடிப்புகளை நிகழ்த்தியது. ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் நிலைமை எல்லை மீறி சென்றது. அதோடு லெபனான் மீதும் போரை தொடங்குவதாக இஸ்ரேல் அறிவித்தது. லெபனானின் தெற்கு பகுதிக்குள் இஸ்ரேல் படைகள் நுழைந்து தாக்குதலை தொடங்கின. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் தற்போது இஸ்ரேல் - லெபனான் இடையே மோதல் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இடைத்தரகர்கள் போல் செயல்பட்டு இருதரப்பிடமும் பேசி மோதலை நிறுத்தி உள்ளன.
இதுதொடர்பான ஒப்பந்தத்தின் மூலம் இருநாடுகள் இடையேயான மோதல் 60 நாள் அமலில் இருக்கும். தேவையென்றால் நீட்டிக்கப்படும். இந்த காலக்கட்டத்தில் இருதரப்பும் தாக்குதலை நடத்த கூடாது. லெபனான் நாட்டில் முகாமிட்டுள்ள இஸ்ரேல் படைகள் படிப்படியாக வெளியேற வேண்டும். ஹிஸ்புல்லா அமைப்பின் மறுகட்டமைப்பை தடுக்கும் வகையில் அந்த நாட்டின் தெற்கு பகுதியின் பாதுகாப்பை அந்த நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும். இதனை கண்காணிக்க தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைதி ஒப்பந்தத்தை மீறி ஹிஸ்புல்லா செயல்பட்டால் அதற்கான எதிர் நடவடிக்கைகளை எடுக்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஹிஸ்புல்லா எதிர்த்து இருந்தாலும் கூட தற்போது இருநாடுகள் தாக்குதலை நிறுத்தி உள்ளன. இந்நிலையில் தான் இருநாடுகள் இடையேயான இந்த முடிவுக்கு நம் நாடு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.இஸ்ரேல் - லெபனான் இடையேயான போர் நிறுத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் எப்போதுமே மோதல், கட்டுப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளோம். பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். இந்த நடவடிக்கை என்பது பரந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலையான தன்மைக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications