யானைகளின் வலியை பேசும்.. போச்சர் சீரிஸ்! வித்தியாசமாக விளம்பரம் செய்த அமேசான் பிரைம்
டெல்லி: அமேசான் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ள 'போச்சர்' சீரிஸ் குறித்த விளம்பரத்தை அமேசான் நிறுவனம் வித்தியாசமான முறையில் செய்திருக்கிறது.
இந்தியாவில் யானை தந்தங்கள் கடத்தப்படுவது இன்னும் முற்றிலுமாக தடுக்கப்படவில்லை. காடுகள் உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கும் யானைகளை, அதன் தந்தத்திற்காக கொடூரமாக கொலை செய்யும் சம்பவங்களை மையப்படுத்தி 'போச்சர்' எனும் சீரிஸ் எடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த 'டெல்லி க்ரைம்' எனும் தொடர் மூலம் கவனம் பெற்றிருந்த ரிச்சி மேத்தாதான் இந்த போச்சர் சீரிஸை இயக்கியுள்ளார். இது நாளை அமேசான் ஓடிடியில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்த சீரிஸை விளம்பரப்படுத்துவதற்காக அமேசான் நிறுவனம் மேற்கொண்ட வித்தியாசமான முயற்சி கவனம் ஈர்த்திருக்கிறது. அதாவது, டெல்லி, ராஜஸ்தான், ஹைதராபாத் என முக்கிய நகரங்களில், பொருட்களை டெலிவரி செய்ய பயன்படுத்தும் பாக்ஸ் போன்ற பொருளை காட்சிக்கு வைத்திருந்தது. அளவில் பெரியதாக இருக்கும் இந்த பெட்டியில் என்ன இருக்கிறது? என்பது அனைவரிடமும் ஆர்வத்தை தூண்டியது.

இந்நிலையில் இந்த பெட்டியில் இருப்பதை அமேசான், திறந்து காட்டியிருக்கிறது. பெட்டிக்குள் யானை தந்தங்கள் இருக்கின்றன. போச்சர் சீரிஸை விளம்பரப்படுத்தவும், காடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முயற்சியை அமேசான் மேற்கொண்டிருக்கிறது. இதனை பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications