பழைய ஆயுதத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. கொரோனா அவசரக்கால ஒத்திகை! பறந்த ஸ்ட்ரிக்ட் உத்தரவு
டெல்லி: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், டிச.27ஆம் தேதி கொரோனா அவசரக்கால ஒத்திகை பயிற்சியை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவ தொடங்கிய போது, சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா, உலகெங்கும் பரவியது. அதைக் கட்டுப்படுத்தவே நமக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனது. இப்போது தான் உலகெங்கும் மீண்டும் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது.
இப்போது மீண்டும் அதேபோல நடக்கிறது. சீனாவில் வைரஸ் பாதிப்பு கையை மீறிச் சென்றுள்ளது. அங்கு ஜீரோ கோவிட் பாலிசி நீக்கப்பட்ட உடன் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

சீனா
இதனால் உலக நாடுகளுமே அச்சமடைந்துள்ளன. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் இருந்தே உலக நாடுகள் இன்னுமே முழுமையாக மீளவில்லை. இந்த நேரத்தில் மீண்டும் கொரோனா மற்றும் லாக்டவுன் என்றால் நிலைமை மோசமாகும் என்பதே இவர்களின் அச்சம். இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் சீனாவின் கொரோனா நிலை குறித்து இப்போது கூர்ந்து கவனித்து வருகிறது. ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது சற்று கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

பிரதமர் மோடி
இந்தியாவிலும் இப்போது கொரோனா பாதிப்பு குறித்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி சுகாதார வல்லுநர்களுடன் இது குறித்து ஆலோசனை நடத்தினார். அதில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் ஆலைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் மருத்துவமனை உள்கட்டமைப்புகள் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தினார்.

ஒத்திகை பயிற்சி
இதற்கிடையே வரும் டிச.17ஆம் தேதி நாடு முழுக்க கொரோனா அவசரக்கால ஒத்திகை பயிற்சியை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படும் நிலையில், இந்த அவசரக்கால ஒத்திகை பயிற்சியை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சோதனையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என இரண்டும் பங்கேற்கும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, கொரோனா தடுப்பூசி பணிகளும் தொடங்கும் முன்பும் கூட மத்திய அரசு இதேபோன்ற ஒத்திகையை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சோதனை
இந்த பயிற்சி ஒத்திகை போது சுவாச பிரச்சினை உள்ள நோயாளிகளை, பிபிஇ அணிந்த மருத்துவர்கள் சோதனை செய்வார்கள். மேலும், அவசர மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. பிபிஇ, ஆக்சிஜன் சப்ளை, மானிட்டர்கள், டிஃபிபிரிலேட்டர்கள் மற்றும் வென்டிலேட்டர்களின் செயல்பாடுகளும் கூட இந்த சோதனையில் டெஸ்ட் செய்யப்பட உள்ளது. இதில் எதாவது பிரச்சினைகள் இருந்தால், அதைக் கண்டறிந்து சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

அச்சம் வேண்டாம்
இந்த பயிற்சி நடப்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. சீனாவில் இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாலேயே இந்த பயிற்சியை மத்திய அரசு நடத்துகிறது. மேலும், புதிய வேரியண்ட் சீனாவில் பரவும் நிலையில், அது குறித்தும் கண்காணித்து வருவதாகவும் தேவைப்படும் நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு
இந்தியாவில் கொரோனா பரவல் குறைவாக உள்ளது என்பதற்காக நாம் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. குறிப்பாகக் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வரவுள்ள நிலையில், நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அதிக மக்கள் ஒன்று கூடும் இடங்களுக்குச் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும். மேலும், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். இதுமட்டுமின்றி முடிந்த வரை சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.












Click it and Unblock the Notifications