பிரதமர் மோடி-ரஷ்ய அமைச்சர் திடீர் மீட்டிங்! 40 நிமிடம் நடந்த பரபர சந்திப்பு! பிரதமர் சொன்னது இதுதான்
டெல்லி: உக்ரைன் போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார்.
கடந்த பிப். இறுதியில் தொடங்கிய உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரால் இரு நாட்டு ராணுவங்கள் மட்டுமின்றி, உக்ரைன் மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மாதத்திற்கு மேலாகவே இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிகளில் பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே பல விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது.

உக்ரைன் போர்
குறிப்பாக, உக்ரைனில் இருக்கும் ராணுவத்தைக் குறைக்கவும் ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. அதேபோல உக்ரைன் நாடும் நேட்டோவில் இணையும் முயற்சியைக் கைவிட்டு நடுநிலை நிலைப்பாட்டை எடுக்க ஒப்புக்கொண்டன. இதனால், இரு தரப்பிற்கும் இடையே நடைபெறும் போர் முடிவுக்கு வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இருநாடுகளுக்கும் இடையே போர் தொடரும் நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று முன்தினம் டெல்லி வந்தார்.

அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்
உக்ரைன் போருக்குப் பின்னர், ரஷ்யாவின் உயர்மட்ட அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும். ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உக்ரைன் போர் விவகாரத்தில் ஒருதலைபட்சமாக நிலைப்பாட்டை எடுக்காமல் இருக்கும் இந்தியாவின் நடவடிக்கையைப் பாராட்டுவதாக செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி உடன் சந்திப்பு
அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியை ரஷ்ய அமைச்சர் செர்ஜி லாவ்ரோ நேற்று மாலை சந்தித்தார். அமைதி முயற்சிகளுக்கு எந்த வகையிலும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளதாக இந்தச் சந்திப்பிற்குப் பின்னர் பிரதமர் மோடி குறிப்பிட்டார். பிரதமர் மோடி- ரஷ்ய அமைச்சர் செர்ஜி லாவ்ரோ ஆகியோர் இடையோன சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது. கடந்த 2 ஆண்டுகளில் வெளிநாட்டு அமைச்சர் ஒருவரைப் பிரதமர் மோடி சந்திப்பது இதுவே முதல்முறையாகும். கடந்த காலங்களில் இங்கிலாந்து, சீனா, ஆஸ்திரியா, கிரீஸ் மற்றும் மெக்சிகோ அமைச்சர்கள் இந்தியா வந்த போதிலும், அவர்களைப் பிரதமர் மோடி சந்திக்கவில்லை.

பிரதமர் அலுவலகம்
இது தொடர்பாகப் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் போர், அமைதிப் பேச்சுவார்த்தை ஆகியவை குறித்து லாவ்ரோவ் பிரதமரிடம் விளக்கியதாகவும் அப்போது உக்ரைன் போரை நிறுத்துமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் மத்தியஸ்தராகச் செயல்பட இந்தியா தயாராக உள்ளதைக் குறிப்பிடும் வகையிலேயே இந்த அறிக்கை உள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியா நிலைப்பாடு
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செர்ஜி லாவ்ரோ, "இந்தியா எங்களுக்கு முக்கியமான மற்றும் தீவிரமான நாடு. இரு நாடுகளுக்கும் இடையே இந்தியா பொதுவான அமைதி நாடாக இருந்தால், நாங்கள் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கிறோம். மேற்குலக நாடுகள் தங்கள் பொறுப்பை விட்டுவிட்டது. இந்தியா சரியான நேரத்தில் மிகச் சரியாகச் செயல்பட்டு வருகிறது" என்றார்.
Recommended Video

அமெரிக்கா
ரஷ்ய வெளியுறவு அமைச்சரின் இந்தியப் பயணத்திற்கு முன்பு, அமெரிக்கத் துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங், ரஷ்யாவுக்கு உதவ முயலும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிசக்தி விரைவாக அதிகரிக்கவும் வாய்ப்பில்லை என்று தலீப் சிங் தெரிவித்தார். மேலும், இந்தியா குறைந்த விலையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை வாங்குவது குறித்து பரிசீலனை செய்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications