உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் போலந்திற்கு மாற்றம்.. அவசர முடிவுக்கு என்ன காரணம் தெரியுமா
டெல்லி: உக்ரைன் நாட்டில் போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள இந்தியத் தூதரகம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உக்ரைன் நாட்டில் கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிப் போர் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. ரஷ்ய ராணுவத்தை கண்டு துளியும் அஞ்சாமல் உக்ரைன் வீரர்கள் தொடர்ச்சியாகத் துணிச்சலுடன் போராடி வருகின்றனர்.
இதனால் அங்குப் பல இடங்களில் போர் இன்னும் தொடர்கிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

பேச்சுவார்த்தை
போர் காரணமாக உக்ரைன் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என உலக நாடுகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. குறிப்பாகக் கடந்த வாரம் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். அதிலும் நல்ல முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

கடும் பாதிப்பு
இந்தப் போர் காரணமாக உக்ரைன் மக்கள் மட்டுமின்றி, அங்கு வசிக்கும் வெளிநாட்டினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். போர் ஆரம்பித்த உடன் உக்ரைன் நாட்டிற்கான விமானச் சேவை நிறுத்தப்பட்டது. இதனால், அங்குள்ள வெளிநாட்டினர் தாயகம் திரும்ப முடியாமல் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். போர் தொடங்கிய சமயத்தில் அங்கு 17,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருந்த நிலையில், உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் அவர்கள் பத்திரமாகத் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

தூதரகம்
இதற்கிடையே உக்ரைன் நாட்டில் 3ஆவது வாரமாகப் போர் தொடரும் நிலையில், உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது, அதற்குப் பதிலாகத் தற்காலிகமாக போலந்து நாட்டில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பல முக்கிய நகரங்கள், குறிப்பாக மேற்கு உக்ரைன் பகுதிகளில் ரஷ்யத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் அப்போது இருக்கும் சூழலைப் பொருத்து நிலைமை மறு மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போலந்து நாட்டில்
முன்னதாக உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் நகரில் இந்தியத் தூதரகம் செயல்பட்டு வந்தது. அங்கு ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கிழக்கு உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள லிவிவ் நகரில் இந்தியாவின் தூதரகம் கடந்த மார்ச் முதல் வாரம் மாற்றப்பட்டது. இப்போது அங்கும் தாக்குதல் தீவிரமடைந்து வரும் சூழலில், போலந்து நாட்டிற்குத் தூதரகம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications