ஏர் இந்தியா விமானத்தில் பெரும் பாதுகாப்பு மீறல்.. சீட் அருகே கிடந்த வெடிமருந்து குப்பி! ஷாக்கான பயணிகள்
டெல்லி: துபாயில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளின் இருக்கை அருகே வெடிமருந்து குப்பி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 500 க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில், விமானத்திற்குள் வெடி மருந்து குப்பி கண்டெடுக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த வாரத்தில் விமானங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது. சர்வதேச விமானங்கள், உள்நாட்டு விமானங்கள் என பாரபட்சம் இன்றி தினமும் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களால், பல்வேறு நகரங்களிலும் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டு சோதனைக்கு பிறகு கிளம்பி சென்றன.

இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். விமான நிறுவனங்களும் பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தன. இதற்கிடையே, காலிஸ்தானி பயங்கரவாதியான பன்னூன் அண்மையில் மிரட்டல் ஒன்றை விடுத்தார். அதில், நவம்பர் 1 முதல் 19ம் தேதி வரை யாரும் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார். சீக்கியர்கள் மீதான தாக்குதல் நடந்து 40 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அந்த குறிப்பிட்ட தேதிகளில் ஏர் இந்தியா விமானம் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்து இருந்தார்.
விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு என தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், துபாயில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தின் இருக்கைக்கு அடியில் வெடி மருந்து குப்பி கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 27 ஆம் தேதி துபாயில் இருந்து ஏர் இந்தியாவுக்கு சொந்தமான AI916 என்ற விமானம் டெல்லிக்கு வந்தது.
இந்த விமானத்தில் பயணிகளின் இருக்கை ஒன்றின் கவரில் வெடி மருந்து குப்பி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த விமான பணியாளர்கள் உடனடியாக விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதன்பிறகு எடுக்கப்பட்டுள்ளன. விமானத்தில் இத்தகைய பொருட்கள் எல்லாம் தடை செய்யப்பட்ட லிஸ்டில் உள்ளது. இத்தனையும் மீறி விமானத்திற்குள் வெடி மருந்து குப்பி வந்தது பெரும் பாதுகாப்பு விதி மீறலாக பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இத்தகைய மிரட்டல் விடுக்கும் நபர்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்க மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. விமானத்தில் பறக்க தடை விதிப்பது சிறை தண்டனை உள்ளிட்டவற்றையும் விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர பரிசீலித்து வருகிறது.












Click it and Unblock the Notifications