கோவை இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு சொந்த வீடு வழங்க முன்வந்த ஆனந்த் மகிந்திரா!
டெல்லி: கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வரும் கமலாத்தாளுக்கு மகிந்திரா நிறுவனம் சார்பில் சொந்த வீடு வழங்கவுள்ளது.
கோவை வடிவேலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி. இவர் விலைவாசி உயர்ந்து வரும் போதிலும் ரூ 1 க்கு இட்லி கொடுத்து வருகிறார்.
கடந்த 30 ஆண்டுகளாக ரூ 1க்கே வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என பாராட்டு தெரிவித்து வந்தார்கள். இந்த நிலையில் இவர் பத்ம விருதுக்கும் தேர்வானார்.

ட்விட்டர்
கமலாத்தாள் பாட்டி ஒரு சிறிய குடிசையில் வசித்து கொண்டே விறகு அடுப்பில் சமைத்து கொடுத்து வருகிறார். இந்த நிலையில் மகிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகிந்திரா 2 ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

சமையல் எரிவாயு
அதில் அவர் கூறியிருக்கையில் ஏழை எளிய மக்களும் பசியாற வேண்டும் என்பதற்காக விறகு அடுப்பு மூலம் ரூ 1க்கு ஒரு இட்லி என மலிவான விலையில் விற்பனை செய்து வருகிறார் கமலாத்தாள் என புகழாரம் சூட்டியிருந்தார். அத்துடன் அவருக்கு விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

குறைந்த வருமானம்
லாப நோக்கம் இல்லாமல் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களும் வயிறார சாப்பிட வேண்டும் என்பதற்காக ரூ 1 க்கு ஒரு இட்லி விற்பனை செய்வதாக கமலாத்தாள் கூறியிருந்தார். இந்த நிலையில் கோவையில் உள்ள பாரத் கேஸ் நிறுவனம் கமலாத்தாள் பாட்டிக்கு இலவசமாக எரிவாயு அடுப்பை வழங்கியுள்ளது.

சொந்த நிலம்
தனது வியாபாரத்தை பெரிதுப்படுத்தி இன்னும் பலர் வயிறார சாப்பிட வேண்டும் என கமலாத்தாளின் விருப்பத்தை மகிந்திரா நிறுவனம் நிறைவேற்றியுள்ளது. மகிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மகிந்திரா லைஃப்ஸ்பேஸ் நிறுவனம் கமலாத்தாளுக்குச் சொந்தமாக நிலம் வாங்கி பதிவு செய்து உதவியிருக்கிறது. இதில் அவருக்கு வீடு மற்றும் இட்லி கடை நடத்துவதற்கான கட்டுமானத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications