ஒரே நாளில் பல கோடி சம்பாதிக்கலாமா! டாடா சொல்வது என்ன தெரியுமா? உண்மையை போட்டுடைத்த ஆனந்த் சீனிவாசன்
டெல்லி: ரத்தன் டாடா குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பது போலச் சொல்லும் போலி வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ என்று கூறிய இணையத்தில் ஒரு வீடியோ டிரெண்டானது. அப்போது இணையம் முழுக்கவே அந்த வீடியோ குறித்து தான் பேச்சாக இருந்தது.

நடிகை ராஷ்மிகா கருப்பு நிற டிரஸில் ராஷ்மிகா மந்தனா லிப்டில் உள்ளே வருவது போல இருந்தது. ஆனால், அது உண்மை இல்லை. யாரோ சிலர் டீப் ஃபேக் (Deepfake) முறையில் அந்த வீடியோவை உருவாக்கி இருந்தனர்.
டீப் ஃபேக்: இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டுமின்றி அப்போது வரிசையாக பல்வேறு நடிகைகளின் டீப் பேக் வீடியோவும் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. இந்த டீப் ஃபேக் வீடியோக்களுக்கு உரிய சட்டதிட்டங்கள் இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணமாகும். மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மற்றொரு வீடியோ டிரெண்டானது.
அதில் ரத்தன் டாடா குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு செய்யுங்கள்.. நல்ல லாபம் பெறலாம் எனச் சொல்வது போல இருந்தது. நாட்டின் டாப் தொழிலதிபரான ரத்தன் டாடா இதுபோல சொன்னது பேசுபொருளானது. அதேநேரம் இன்னும் சிலருக்குச் சந்தேகமும் வந்தது. ரத்தன் டாடா பொதுவாக இப்படியெல்லாம் சொல்ல மாட்டார். அப்படிச் சொல்லி இருந்தாலும் அவரது நிறுவனமே பல இருக்கும் போது ஏன் மற்றொரு நிறுவனத்தைச் சொல்கிறார் என்ற சந்தேகம் இருந்தது.
ஆனந்த் சீனிவாசன்: அதன் பிறகே இது போலியான ஒரு வீடியோ என்பதும் இதையும் டீப் பேக் தொழில்நுட்பம் மூலம் அவர்கள் உருவாக்கியதும் தெரிய வந்தது. இதற்கிடையே இது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தனது வீடியோவில் விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "ரத்தன் டாடா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் போஸ்ட் போட்டிருந்தார். இன்ஸ்டாகிராமில் ரத்தன் டாடாவின் நேர்காணலை டீப் பேக் மூலம் மாற்றி வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார்கள். குறிப்பிட்ட ஐபிஓ- வில் முதலீடு பல கோடி சம்பாதிக்கலாம்.. 100% லாபம் கிடைக்கும் என்றெல்லாம் ரத்தன் டாடா சொல்வது போல வீடியோவை பகிர்ந்து இருந்தார்கள்.

ரத்தன் டாடா சொன்னாரா: ஆனால், உண்மையில் ரத்தன் டாடா எதிலும் முதலீடு செய்யச் சொல்லவில்லை. அவரது சொந்த நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் தொடங்கி எந்தவொரு ஐபிஓ-விலும் அவர் முதலீடு செய்யும்படி கூறவில்லை. ஆனால், இங்கே கடித்து.. அங்கே கடித்து கடைசியில் ரத்தன் டாடா பெயரிலேயே போலி வீடியோவை பகிர்ந்துள்ளனர்.
ரத்தன் டாடா ஏதோ ஒரு பங்கை வாங்கச் சொல்வது போல வீடியோவை பரப்புகின்றனர். நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற பெரி ஆட்கள் யாருமே இதை வாங்கலாம் இதை விற்கலாம் எனச் சொல்ல மாட்டார்கள். யார் சொன்னாலும் அவர்கள் பேச்சை நீங்கள் அப்படியே கேட்கக் கூடாது. நீங்கள் சொந்தமாக ஆய்வு செய்து தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications