ஏமாற்றிய அன்புமணி.. 6 நாள் மட்டுமே நாடாளுமன்றம் வருகை.. இளையராஜா இன்னும் மோசம்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று நிறைவடைந்து இருக்கிறது. அதில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத் தொடரில் தமிழகத்தில் இருந்து திமுக எம்பிக்களான திருச்சி சிவா, கிரி ராஜன், அதிமுக எம்பி தம்பிதுரை அனைத்து நாட்களும் சபைக்கு சென்றிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் இளையராஜா இரண்டு நாட்களும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆறு நாட்கள் மட்டுமே சபை நடவடிக்கைகளில் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அமர்வுகளாக நடைபெற்றது. 2வது அமர்வு கடந்த நான்காம் தேதியுடன் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக பெரும் எதிர்பார்ப்புகள் விமர்சனங்களுக்கிடையே வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.

தொடர்ந்து மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே வக்பு வாரிய மசோதா நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். முதல் அமர்வு 13ஆம் தேதி நிறைவு பெற்றது.
மார்ச் 10-ம் தேதி இரண்டாம் அமர்வு தொடங்கிய நிலையில் வங்கி சட்ட திருத்த மசோதா, குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா, ரயில் சட்ட திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகனம் செய்யப்பட்டதற்கும் ஒப்புதல் பெறப்பட்டது. கடைசியாக வக்பு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரு அவைகளிலும் நீண்ட விவாதத்திற்கு பிறகு நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஏப்ரல் நான்காம் தேதி இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
வரும் ஜூலை மாதத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்பிக்களின் வருகை தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவை இணைய தளங்களில் விபரம் வெளியிடப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் திமுக எம்பிக்களான திருச்சி சிவா, கிரி ராஜன், அதிமுக எம்பி தம்பிதுரை ஆகியோர் பட்ஜெட் கூட்டத் தொடரின் அனைத்து நாட்களிலும் அவைக்கு வருகை தந்திருக்கின்றனர். நியமன எம்பியான இசையமைப்பாளர் இளையராஜா இரண்டு நாட்கள் மட்டுமே சபைக்கு வந்திருக்கிறார். மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆறு நாட்கள் மட்டுமே சபைக்கு வருகை தந்துள்ளார் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் கடும் எதிர்ப்பு கிடையே வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவை எம்பி ஆன ஜிகே வாசன் அதற்கு ஆதரவாக வாக்களித்தார். திமுக அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து நிலையில் அன்புமணி ராமதாஸ் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications