ஆந்திராவுக்கு அள்ளி கொடுத்த நிர்மலா சீதாராமன்.. சிறப்பு நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு!
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய திட்டங்கள் இடம் பெற்று இருந்தது. குறிப்பாக ஆந்திராவுக்கு இதில் பல அறிவிப்புகள் இருந்தன. வளர்ச்சி பணிகளுக்காகச் சிறப்பு நிதி ஒதுக்கீடு தொடங்கிப் பல திட்டங்களை நிர்மலா சீதாராமன் ஆந்திராவுக்காக அறிவித்தார்.
நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், இந்த முறை லோக்சபா தேர்தல் காரணமாக நிர்மலா சீதாராமன் கடந்த பிப். மாதம் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்தார்.

ஆந்திரா: லோக்சபா தேர்தலில் வென்று என்டிஏ கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேற்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலான நிலையில், அதைத் தொடர்ந்து இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து தேவை எனக் கோரிக்கை விடுத்திருந்தது.
சிறப்பு நிதி: இதற்கிடையே இன்றைய தினம், ஆந்திரா மாநிலத்துக்கு ஏராளமான சிறப்புத் திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ. 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் அறிவித்தார். குறிப்பாக ஆந்திர தலைநகராக உருவாகும் அமராவதியை நிறுவக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும், ஆந்திரப் பிரதேசத்தில் மின்சாரம், சாலை, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அறிவித்த அவர், அங்கே சாலை மேம்பாடு நீர் திட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் ஆந்திராவில் பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
போலாவரம் பாசனத் திட்டம்: ஆந்திரா மற்றும் அதன் விவசாயிகளின் உயிர்நாடியாகக் கருதப்படும் போலாவரம் பாசனத் திட்டத்திற்கு நிதியுதவி அளித்து, அத்திட்டத்தை நிறைவு செய்வதிலும் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications