எல்லா பக்கமும் பிரஷர்.. 4 ஆப்ஷன் இருக்கு.. டெல்லிக்கு பிளைட் ஏறிய அண்ணாமலை.. இன்று ரொம்ப முக்கியம்!
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் காரணமாக பாஜக தரப்பிற்கு பிரஷர் எகிறி உள்ளது.
டெல்லி: அதிமுகவின் இரண்டு தரப்பும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக வேட்பாளரை களமிறக்கிவிட்ட நிலையில் இன்று பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் முக்கியமான ஆலோசனை நடத்த உள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் சூடு பிடித்து உள்ளது. இந்த மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆளும் தரப்பில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இவர் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். 11 அமைச்சர்களை களமிறக்கி திமுக கூட்டணி இங்கே தீவிரமாக பணிகளை செய்து வருகிறது.

அதிமுக
ஆனால் எதிர் தரப்பில்தான் பல திருப்பங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக அடித்து ஆட தொடங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஈரோடு கிழக்கில் சின்னம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போட்டியிடுவோம் என்ற எடப்பாடியின் உறுதித்தன்மையை இது காட்டுகிறது. பாஜக மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு இன்னும் வேட்பாளரை அறிவிப்பதை பற்றி முடிவு எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் எடப்பாடி தரப்பு வேட்பாளரை அறிவித்து, தேர்தல் பணிகளை செய்வதற்காக குழுவை அமைத்து பணிகளை தொடங்கி உள்ளது.

தேர்தல் பணிகள்
ஈரோடு கிழக்கில் எடப்பாடி பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளார். பாஜகவுடன் மோதினால், பாஜகவை விட்டு விலகி சென்றால் டெல்லி மூலம் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தேசிய ஜனநாயக "முற்போக்கு" கூட்டணியை உருவாக்கி உள்ளார் எடப்பாடி. இது பாஜக தரப்பில் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாஜக - எடப்பாடி தரப்பின் பிளவை வெளிச்சம் போட்டு காட்டியது. இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் இந்த கூட்டணி பெயர் மாற்றப்பட்டது. தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயர் நீக்கப்பட்டு புதிதாக அதிமுக தலைமையிலான கூட்டணி பணிமனை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஓபிஎஸ்
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு ஓ பன்னீர்செல்வம் சார்பாகவும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அவர்கள் தரப்பு களமிறக்கி உள்ளது இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக நான் ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டேன். தேர்தலில் விண்ணப்பம் B-யில் கையெழுத்து வாங்க வந்தால், பொது வேட்பாளரை நிறுத்தினால் அதில் கையெழுத்து போடுவேன். தேசிய அளவில் பாஜகதான் தலைமை, தமிழக அளவில் அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை. இங்கே பாஜக போட்டியிடுவதாக இருந்தால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பேன். எங்கள் வேட்பாளரை வாபஸ் வாங்குவோம் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
அதிமுகவின் இரண்டு தரப்பும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக வேட்பாளரை களமிறக்கிவிட்ட நிலையில் இன்று பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் முக்கியமான ஆலோசனை நடத்த உள்ளார். அண்ணாமலை இன்று டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவிடம் ஆலோசனை நடத்த உள்ளார். அவர் முன்பு தற்போது 4 ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஒன்று எடப்பாடி தரப்பை ஆதரித்து அவரை ஒற்றை தலைமையாக ஏற்பது. இதனால் அண்ணாமலையின் அரசியல் கனவுகளுக்கு சிக்கல் வரலாம். இரண்டாவதாக ஓபிஎஸ்ஸை ஆதரித்து, எடப்பாடியுடன் கூட்டணியை முறிப்பது. இதுவும் எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.

எடப்பாடி சிக்கல்
மூன்றாவதாக எடப்பாடி, ஓபிஎஸ் இருவரையும் ஆதரிக்காமல் தனியாக வேட்பாளரை நிறுத்துவது. இப்படி செய்தாலும் சிக்கல். இதுவும் எடப்பாடியை எதிர்ப்பது போல ஆகிவிடும். எடப்பாடி புதிதாக உருவாக்கிய கூட்டணி சரி என்று ஆகிவிடும். நான்காவதாக யாரையும் ஆதரிக்காமல் தேர்தலை புறக்கணிப்பது. அப்படி செய்தால் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று பாஜக உருவாக்கி இருக்கும் பிம்பம் உடைந்துவிடும். இதனால் பாஜக தரப்பிற்கு பிரஷர் எகிறி உள்ளது. இதையடுத்தே என்ன செய்யலாம்.. என்ன முடிவு எடுக்கலாம் என்று ஆலோசனை செய்ய அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications