பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு!
டெல்லி: தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து ஏன் விலகினார் என்பது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபினைச் சந்திக்க அண்ணாமலை டெல்லி சென்றிருந்த நிலையில், அவரிடம் பாஜகவில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை அண்ணாமலை கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து ஏன் விலகினார் என்பது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து அண்ணாமலை விளக்கினார்.

இந்தச் சந்திப்பின் போது, தமிழக அரசியல் சூழல் குறித்தும், தான் ஏன் கட்சியை விட்டு வெளியேறும் முடிவை எடுத்தேன் என்பது குறித்தும் அண்ணாமலை அமித்ஷாவிடம் விரிவாக எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
விலகலுக்கான பின்னணி என்ன?
மத்திய அமைச்சரவையில் தமக்கு அளிக்கப்பட்ட முக்கியப் பதவியை அண்ணாமலை நிராகரித்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இந்த முடிவிற்கான காரணங்களையும் அவர் உள்துறை அமைச்சரிடம் விளக்கியுள்ளார்.
கட்சியின் மேலிடப் பொறுப்பில் உள்ள சிலருடன் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் தமிழகத்தில் மாற்று அரசியல் பாதையை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அண்ணாமலை இந்தச் சந்திப்பில் அமித்ஷாவுடன் விவாதித்ததாகத் தெரிகிறது.
அண்ணாமலையின் அடுத்த அதிரடி என்ன?
டெல்லி புறப்படுவதற்கு முன்பாகவே, "அனைத்து கேள்விகளுக்கும் இன்னும் இரண்டு நாட்களில் பதிலளிக்கிறேன்" என அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
அதன்படி, டெல்லி சந்திப்புகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதும், அவர் தனது அடுத்தகட்ட அரசியல் பயணம் (புதிய இயக்கம் அல்லது புதிய கட்சி) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். நாளை மறுநாள் அண்ணாமலைக்கு பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
இதுகுறித்து விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், அமித்ஷாவை சந்திக்க நேரம் கிடைக்கவில்லை என்ற நிலையில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்த அண்ணாமலை சென்னை திரும்ப இருந்தாராம். ஆனால் அமித்ஷா இல்லத்தில் இருந்து வந்த திடீர் அழைப்பால் உடனே அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற அண்ணாமலை அங்கு அனைத்தையும் விளக்கினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் இந்த அண்ணாமலை
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, கரூர் மாவட்டத்துக்காரர். இவர் காவல்துறையிலிருந்து விலகி அரசியலில் இணைந்தார். ஆகஸ்ட் 2020-ல் பாஜகவில் சேர்ந்த அவர், ஆகஸ்ட் 2020 முதல் ஜூலை 2021 வரை தமிழக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராகப் பதவி வகித்தார். பின்னர், ஜூலை 2021 முதல் ஏப்ரல் 2025 வரை மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
அவரது தலைமையில் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு 11 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி சேரும் நோக்கில் அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பிறகு நயினார் நாகேந்திரன் புதிய மாநிலத் தலைவரானார்.
அண்ணாமலை மாற்றப்பட்ட பிறகு, அதிமுகவுடன் வலுவான கூட்டணி அமைந்தபோதிலும், பாஜகவால் 3 சதவீத வாக்குகளையே பெற முடிந்தது. இதன் காரணமாக பாஜகவின் வாக்கு வங்கி முன்பு இருந்ததைவிடக் கணிசமாக குறைந்துவிட்டது. இது இனி வரும் தேர்தல்களில் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications