ஏர் இந்திய விமானத்தில் மீண்டும் அதிர்ச்சி.. வேர்க்க விறுவிறுக்க 5 மணி நேரம்.. பயணிகள் திக்திக்!
டெல்லி: ஏர் இந்தியா விமானம் குஜராத்தில் விபத்தில் சிக்கி இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. இதற்கிடையே ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு விமானத்தின் மீது பயணிகள் சரமாரியாகப் புகாரளித்துள்ளனர். இதனால் பயணிகள் பலருக்கும் உடல்நலக்குறைவு கூட ஏற்பட்டதாகவும் இதனால் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் விசாரணை நடத்த வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குஜராத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் கடந்த வாரம் விபத்தில் சிக்கியது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் விபத்தில் சிக்கியது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது. இந்த விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா மீதான அதிருப்தியை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
இதற்கிடையே ஏர் இந்தியா விமானம் தொடர்பாக இன்று மற்றொரு புகார் எழுந்துள்ளது. துபாய் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏசி இல்லை என்றும் சுமார் ஐந்து மணி நேரம் ஏசி இல்லாமல் பயணிகள் வெப்பத்தில் தவித்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஜூன் 13ஆம் தேதி நடந்துள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் புறப்படுவதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் குறைந்த விலையில் பயணிப்போருக்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்கி வருகிறது. இண்டிகோவுக்கு போட்டி அளிக்கும் வகையில் இதன் விமான டிக்கெட் குறைவாகவே இருக்கும். மேலும், இதிலும் இண்டிகோவை போலவே உணவு உட்பட அனைத்திற்கும் தனியாகப் பணம் செலுத்த வேண்டும். இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தான் இப்போது புகார்கள் எழுந்துள்ளன.
என்ன நடந்தது!
இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 196 விமானம் துபாயிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்குச் சென்றது. விமானத்தில் ஏசி வசதி இல்லாததால், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்படப் பயணிகள் பலரும் வியர்வையுடன் அசவுகரியமாகப் பயணிக்க வேண்டி இருந்தது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

தண்ணீர் கூட இல்லை
வெப்பநிலை சுமார் 40 டிகிரி செல்சியஸ் வரை இருந்ததாகப் பயணிகள் தெரிவித்தனர். மாலை 7.25 மணிக்குப் புறப்படவிருந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நள்ளிரவு 12.45 மணிக்குப் புறப்பட்டது. அப்போதும் விமானத்தில் ஏசி செயல்படவில்லையாம். விமானத்திற்குள் வெப்பம் அதிகமாக இருந்ததால், சில முதியவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், பயணிகளுக்கு போதுமான தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என்றும் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதேநேரம் இதுவரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இந்த விவகாரம் குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
ஏர் இந்தியா விபத்து
கடந்த ஜூன் 12ம் தேதி ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு செல்லவிருந்தது. இருப்பினும், புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த ஒரு பயணியை தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். அந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்கு மீண்டும் ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தில் இதுபோல நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications