அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய 3 ரயில்கள்! தடம் புரண்ட கோரமண்டல் ரயில் மீது மோதிய மற்றொரு ரயில்!
டெல்லி: ஒடிசாவில் கோரமண்டல் ரயில் தடம் புரண்டிருந்த நிலையில், மற்றொரு ரயிலும் தடண் புரண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் சர்மா இது குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இன்று ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3.20 மணிக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போலக் கிளம்பியது. இந்த ரயிலின் எண் 12841 ஆகும். இந்த ரயில் மறுநாள் மாலை ஒடிசா, ஆந்திரா வழியாகச் சென்னை வந்தடையும்.

கொல்கத்தாவில் இருந்து கிளம்பிய இந்த ரயில், மாலை பாலசோர் மாவட்டத்தில் வரும் போது தான் விபத்தில் சிக்கியுள்ளது. பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது கோரமண்டல் ரயில் தடம் புரண்டுள்ளது.
சுமார் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் இந்த ரயில் விபத்தில் தடம் புரண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்த போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்குத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. இரவு நேரம் என்பதாலும் வனப்பகுதி என்பதாலும் மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே மற்றொரு ஷாக் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விபத்து நடந்த ஒடிசாவில் மற்றொரு ரயிலும் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.. கோரமண்டல் ரயில் தடம் புரண்டிருந்த நிலையில், மற்றொரு ரயிலும் தடண் புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அங்குத் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா கூறுகையில், "இரவு 7 மணியளவில், ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன.
சிறிது நேரம் கழித்து, யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் அதே பகுதிக்குள் வந்துள்ளது. இருப்பினும், அந்த ரயிலை உரிய நேரத்தில் நிறுத்த முடியவில்லை இதனால், தடம் புரண்டிருந்த கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் மோதியதால், அதன் 3-4 பெட்டிகள் தடம் புரண்டன" என்றார்
இதற்கிடையே இந்த விபத்து குறித்து மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மூன்றாவதாக மற்றொரு ரயிலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. சரக்கு ரயில் ஒன்றும் இந்த விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
அடுத்தடுத்து ஒரே இடத்தில் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கிய இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications