பொய்களை பரப்பும் பாகிஸ்தான்.. பதிலடி கொடுப்பதை தவிர வேறு வழியில்லை.. வெளியுறவுத்துறை வார்னிங்
டெல்லி: பாகிஸ்தான் பொய்களை மட்டுமே பரப்பி வருகிறது. மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை. அதுதொடர்பாக கட்டுக்கதைகளையும், பொய்களையும் மட்டுமே பாகிஸ்தான் பரப்பி வருகிறது என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
இருநாடுகள் இடையேயான பதற்றம் பற்றி எல்லோரும் கூறி வருகிறார்கள். ஆனால் ஒவ்வொருவரும் மனதில் முக்கிய விஷயத்தை வைத்து கொள்ள வேண்டும். ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தாக்குதல்தான் பதற்றத்துக்கான துவக்கம். இந்திய ஆயுதப்படைகள் மே 7ம் தேதி தான் பதிலடி கொடுத்தது. பஹல்காம் தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பிரபலமான அமைப்பாக உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பாகும்.

உகலளாவிய பயங்கரவாதத்தின் மையம் என்ற பெயரை பாகிஸ்தான் பெற்றுள்ளது. உலகில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் பாகிஸ்தானின் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் பதிலடி கொடுப்பதாக கூறி எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்களை தான் பாதிக்கிறது. பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் இல்லமாக தான் பாகிஸ்தான் உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் பயங்கரவாதிகளைத் தாக்குவது மட்டுமே. பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் தாக்குதல் நடத்தப்பட்டது.. மத வழிப்பாட்டு தலங்களை குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் சொல்வது முழுக்க முழுக்க பொய். அது கட்டுக்கதை.
இந்திய பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவருமே தீவிரவாதிகள் தான். தற்போது அழைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கும் இந்த எல்லையில் உள்ள தாக்குதலுக்கும் ஆளான பகுதிகளுக்கும் உறுதியான இணைப்பு உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா பொதுமக்களை தாக்கியதாக பொய்களை பரப்பி வருகிறது. அது அனைத்தும் கட்டுக்கதைகள். பாகிஸ்தான் பொய்களை தான் பரப்பி வருகிறது. பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதை தவிர வேறு வழியில்லை. பயங்கரவாதிகளுக்கு அரசு மரியாதை செலுத்துவது பாகிஸ்தானில் வழக்கமாக உள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications