வேதனை.. மனைவியின் கடைசி ஆசைக்காக.. லண்டனில் இருந்து அகமதாபாத் வந்த கணவன்.. இப்படியா நடக்கணும்!
அகமதாபாத்: லண்டனில் உயிரிழந்த தனது மனைவியின் ஆசைப்படி அவரின் அஸ்தியை கரைக்க அகமதாபாத் வந்துவிட்டு, மீண்டும் லண்டன் திரும்ப இருந்த அர்ஜுன் என்பவர் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அர்ஜுனுக்கு 8 மற்றும் 4 வயதில் இரு பெண் குழந்தைகள் இருப்பதால், அவர்களின் எதிர்காலம் குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 787-8 போயிங் விமானம், டேக் ஆஃப் ஆன சில நொடிகளிலேயே தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் 2 பைலட், 10 விமான ஊழியர்கள் மற்றும் 230 பயணிகள் என்று மொத்தமாக 242 பேர் பயணித்துள்ளனர். அதில் ஒரேயொரு நபர் மட்டுமே தப்பி பிழைத்துள்ளார்.

கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு
அதுமட்டுமல்லாமல் விமானம் போய் விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 10 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் இன்னும் ஏராளமானோர் விமான விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்திற்குள்ளான விமானத்தில் இருந்த 2 கருப்பு பெட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மனைவியின் கடைசி ஆசை
விரைவில் ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளான காரணம் குறித்து தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த ஒருவர் தனது மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்திருப்பது தெரிய வந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் அம்ரேலி அருகே உள்ள வாடியா கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன்பாய் மனுபாய் படோலியா.
தனியாக வந்த அர்ஜுன்
இவர் லண்டனில் செட்டிலான நிலையில், மனைவி பாரதிபென் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த வாரம் மனைவி உயிரிழந்த நிலையில், அவரின் கடைசி ஆசையாக தனது அஸ்தி சொந்த ஊரில் கரைக்கப்பட வேண்டும் என்று கூறி இருக்கிறார். இதனால் லண்டனில் இருந்து அர்ஜுன் தனது 4 மற்றும் 8 வயது பெண் குழந்தைகளை லண்டனில் விட்டுவிட்டு அகமதாபாத்திற்கு வந்துள்ளார்.
விபத்தில் நேர்ந்த சோகம்
அதன்பின் மனைவியின் சொந்த கிராமத்திற்கு சென்ற அர்ஜுன், மனைவியின் அஸ்தியை கரைத்து ஏனைய சடங்குகளையும் செய்திருக்கிறார். இதன்பின் உடனடியாக லண்டனுக்கு டிக்கெட் போட்ட அர்ஜுன், ஏர் இந்தியா விமானம் மூலமாக லண்டன் புறப்பட தயாராகி இருக்கிறார். ஆனால் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதால், அர்ஜுன் உயிரிழந்தார்.
குழந்தைகள் எதிர்காலம்?
ஒரு வார இடைவெளியில் இரு பெண் குழந்தைகளும் தங்களின் பெற்றோரை இழந்து லண்டனில் இருக்கின்றனர். பெற்றோர் உயிரிழந்த நிலையில், லண்டனில் இருக்கும் 2 குழந்தைகளையும் யார் கவனிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவம் மக்களிடையே வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications