இந்திய ராணுவ வரலாற்றிலேயே முதல் முறை.. இளைஞர்களுக்கு 3 வருடம் ராணுவ பணி.. அதிரடி திட்டம்
டெல்லி: இந்திய ராணுவம் ஒரு முக்கியமான திட்டத்தை கையில் எடுத்துள்ளது. பொது மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி கொடுத்து குறுகிய காலத்திற்கு மட்டும் பணி ஆணை வழங்க உள்ளது.
இந்திய ராணுவத்தில் சுமார் 13 லட்சம் வீரர்கள் உள்ளனர். உலகின் மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பு கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
இந்த நிலையில் இந்திய ராணுவத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன் ஒரு பகுதியாக ராணுவத்தில் இளைஞர்கள் 3 ஆண்டுகள் பணிபுரிய அனுமதிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாம்.

திறமையான இளைஞர்கள்
இதுதொடர்பாக, ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ராணுவத்தில் திறமையான இளைஞர்களை இணைய செய்ய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. தற்போது 10 ஆண்டு குறுகிய கால சேவையின் கீழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். புதிதாக யோசிக்கப்பட்டுள்ள, சீர்திருத்தங்களின்படி, 3 ஆண்டுகள் இளைஞர்கள் பணி செய்ய அனுமதிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த திட்டத்திற்கான வரையறைகள் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை என்றார்.

கட்டாயம் இல்லை
அதாவது இந்த அனுமதி கட்டாயமாக இருக்காது. விருப்பத்தின் பேரில் அனுமதிப்பார்களாம். ஆரம்பத்தில், 100 அதிகாரிகள் மற்றும் 1,000 ஜவான் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு பரிசீலிக்கப்படும் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் தெரிவித்தார்.

குறுகிய காலம்
இந்த திட்டத்தின் விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. "டூர் ஆஃப் டூட்டி" அல்லது "மூன்று ஆண்டு குறுகிய சேவை" திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்படும். இதற்கு முக்கிய அளவுகோலாக, வயது மற்றும் உடல் தகுதி இருக்கும்.

தேச பக்தி
நாட்டில் "தேசியவாதம் மற்றும் தேசபக்தி மீண்டும் எழுச்சி பெற்று" உள்ளது. ராணுவத்தில் ஒரு தொழிலாக சேர விரும்பாத ஆனால் குறுகிய காலத்திற்கு ராணுவ வாழ்க்கையை அனுபவிக்க விரும்பும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க இந்த திட்டம் அறிமுகமாகிறது, என்று ராணுவ வட்டாரங்கள் கூறியதாக, பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செலவு எப்படி
டூர் ஆஃப் டூட்டியின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி செலவுகள், சம்பளம் உள்ளிட்டவற்றுக்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது குறித்து ராணுவம் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வில், இந்த திட்டத்தால் நிதி நன்மைகள் அதிகமா இருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஒரு அதிகாரி 10 அல்லது 14 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டால், பயிற்சி, சம்பளம் மற்றும் பிற செலவுகள் தோராயமாக, ரூ .5.12 கோடி முதல் ரூ .6.83 கோடி வரை செலவாகும். ஆனால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பணியிலிருந்து விடுவித்தால் தலா ரூ .80 லட்சம் முதல் ரூ .85 லட்சம் வரைதான் செலவு இருக்கும்.

பல்வேறு கருத்துக்கள்
இளைஞர்களிடம் தேச பக்தி ஊட்டுவது, செலவீனத்தை குறைப்பது போன்றவை, இந்த திட்டத்தின் நோக்கம். ஆனால், இதுகுறித்து நெட்டிசன்களிடையே மாறுபட்ட கருத்து உள்ளது. ராணுவத்தின் கட்டுப்பாட்டை, இந்த இளைஞர்கள் கெடுத்துவிடுவார்கள் என சிலர் கூறுகிறார்கள். சிலரோ, இளைஞர்களின் வேலை வாய்ப்புக்குத்தான் ஆபத்து என்கிறார்கள். சிலரோ, அனைத்து இளைஞர்களுக்கும் ராணுவத்தில் பயிற்சி அளிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்கிறார்கள். எனவே அரசு இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்படுமா என்ற சந்தேகமும் உள்ளது.












Click it and Unblock the Notifications