சூர்யா வில்லன் டாங்லி தோற்றார் போங்க.. சீன வீரர்களிடம் அருணாச்சல் இளைஞர் அனுபவித்த சித்ரவதை இது!.
டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் இருந்து கடத்தப்பட்ட இளைஞரை இந்திய ராணுவ உளவாளியாக ஒப்புக் கொள்ள வேண்டும் என 15 நாட்களுக்கும் மேலாக கொடூரமாக சித்ரவதை செய்திருக்கின்றனர் சீன ராணுவத்தினர்.
லடாக் எல்லையில் மட்டுமின்றி பிற பகுதிகளிலும் சீன ராணுவம் தொடர்ந்து இந்தியாவுக்கு தலைவலியாக இருந்து வருகிறது. அருணாச்சலலில் இந்தியர்களை இருமுறை கடத்திச் சென்று விடுவித்திருக்கிறது சீனா.

சீனாவால் கடத்தல்
அண்மையில் சீனாவால் கடத்தப்பட்ட 5 இந்தியர்கள் பெரும் முயற்சிக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதேபோல் கடந்த மார்ச் மாதம் டோக்லி சிங்காம் Togley Singkam என்ற 21 வயது இளைஞரை சீனா ராணுவத்தினர் கடத்திச் சென்றனர். கொடூரமான சித்ரவதைகளுக்குப் பின்னர் சிங்காம் விடுவிக்கப்பட்டார். சீனா ராணுவ முகாமில் தாம் அனுபவித்த வேதனைகளை சிங்காம் ஊடகங்களில் விவரித்திருப்பதாவது:

பெருங்கூட்டமாக வந்த சீன வீரர்கள்
கடந்த மார்ச் 19-ந்தேதியன்று வனப்பகுதிக்கு வேட்டைக்காக சென்றிருந்தேன். உணவுப் பொருட்களை சேகரிக்கத்தான் வனப்பகுதிக்கு சென்றேன். அப்போது திடீரென பெருங்கூட்டமாக சீன ராணுவத்தினர் அங்கு சூழ்ந்து கொண்டு என்னை கடத்திச் சென்றனர். பின்னர் முகாம் ஒன்றுக்கு கொண்டு போய் என் கைகளை பின்னால் கழுத்துடன் சேர்த்து கட்டிப் போட்டனர். அங்கு மிக மோசமாக என்னை சீன ராணுவத்தினர் அடித்து துன்புறுத்தினர்.

தூங்கவிடாமல் சித்ரவதை
பின்னர் வேறு ஒரு முகாமுக்கு கொண்டு சென்று என் முகத்தை மூடிவிட்டு மீண்டும் அடித்து உதைத்தனர். 15 நாட்களுக்கும் மேலாக ஒரு இருட்டு அறைக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில்தான் அடைக்கப்பட்டிருந்தேன். தூக்கத்தினால் கண்களை மூடினாலும் அடி விழுந்தது. எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தும் துன்புறுத்தினர். அவர்கள் என்னிடம் கேட்டது ஒன்றுதான்.

உளவாளி என ஒப்புக் கொள்ள...
நான் இந்திய ராணுவத்துக்காக உளவு பார்க்கிறேன் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதுதான் அது. எந்த சூழ்நிலையிலும் அப்படி நான் ஒப்புக் கொள்ளவே இல்லை. என் கையெழுத்து மாதிரிகளை எல்லாம் வைத்தும் சோதித்து பார்த்தனர். ஆனால் அவர்கள் சந்தேகித்தபடி நான் உளவாளி இல்லை என்பதை புரிந்து கொண்டனர். நான் பெரிய அளவில் படித்திருக்காவில்லை. சில இந்தி வார்த்தைகள்தான் தெரியும்.. அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசவும் முடியவில்லை.
Recommended Video

இந்திய ராணுவத்தால் மீண்டேன்...
என்னை மொபைல் போன் பயன்படுத்திக் கொள்ளவும் சொன்னார்கள்.. ஆனால் அதில் உள்நோக்கம் இருக்கிறது.. என்னை மாட்ட வைக்க நினைக்கிறார்கள் என புரிந்து கொண்டேன். அதனால் அவர்களது மொபைல் போனை பயன்படுத்தவில்லை. பின்னர் நமது ராணுவத்தின் கடுமையான முயற்சியால் சீன ராணுவத்தால் விடுவிக்கப்பட்டேன். பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி இது போல் எங்களை சீன ராணுவத்தினர் கடத்திச் சென்று சித்ரவதை செய்வது நீண்டகாலமாக நடக்கிறது. நமது எல்லைக்குள் நுழைந்துதான் இந்த அட்டூழியத்தை நடத்துகின்றனர். இவ்வாறு சிங்காம் கூறினார்.












Click it and Unblock the Notifications