சிறைக்குள் "பலே பிளான் போட்டு" மாம்பழங்களை அதிகம் சாப்பிடுகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை
டெல்லி: சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இனிப்புகளை அதிகம் சாப்பிட்டு அதன் மூலம் தனது உடலில் சுகர் லெவலை அதிகமாக்கி, ஜாமீன் கோரும் திட்டத்துடன் செயல்படுவதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லியில் புதிய மதுபான கொள்கை தொடர்பான முறைகேடு வழக்கில் ஆம்ஆத்மியின் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். முதலில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, அடுத்ததாக சஞ்சய் சிங் எம்பி என அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவும் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர்களை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அறை எண் 2 இல் அடைக்கப்பட்டார்.
சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால்: தொடர்ந்து அவர் ஜாமீன் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்ததோடு, கெஜ்ரிவால் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை அமலாக்கத்துறை வழங்கியதால் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் கொடுக்கவில்லை. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையிலேயே உள்ளார்.
இனிப்பை வேண்டும் என்றே சாப்பிடுவதாக: இந்த நிலையில் தான் அமலாக்கத்துறையால் கைதாகி டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கெஜ்ரிவால், தனது உடலில் சர்க்கரை அளவை தொடர்ச்சியாக கண்காணிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தனது மருத்துவரிடம் ஆலோசனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அதாவது வாரத்திற்கு மூன்று நாட்கள் தனது மருத்துவரிடம் வீடியோ கன்பரன்சிங் வாயிலாக கன்சல்ட் செய்ய அனுமதி வேண்டும் என்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த அமலாக்கத்துறை, "சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் நபர், மாம்பழங்கள், இனிப்புகளை தொடர்ச்சியாக சாப்பிடுகிறார். சுகர் போட்ட டீயையும் சாப்பிடுகிறார். ஜாமீன் கோருவதற்காக இவை அனைத்தையும் அரவிந்த் கெஜ்ரிவால் செய்கிறார்" என்றது.
கெஜ்ரிவால் தரப்பு எதிர்ப்பு: இதற்கு கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேக் ஜெயின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், "ஊடகத்தில் கிடைக்கும் தகவல்களை வைத்து அமலாக்கத்துறை வாதாடிக் கொண்டு இருக்கிறது. தற்போது இந்த மனுவை வாபஸ் பெறுகிறோம். கூடுதல் விவரங்களுடன் சிறந்த மனுவை தாக்கல் செய்கிறோம்" என்றார்.
இதையடுத்து, கெஜ்ரிவாலின் உணவு முறை குறித்த மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கின் விசரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.

சிறையில் என்னென்ன வசதிகள்: முன்னதாக சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, சில சலுகைகளை நீதிமன்றம் வழங்கியது. இதில், கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, பாட்டில் குடிநீர், தலையணை, சாக்லேட் மிட்டாய்கள் உள்ளிட்டவை வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதேபோல், கெஜ்ரிவால் தனது மனைவியை தினமும் சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கெஜ்ரிவால் நீரிழிவு நோயாளி என்பதால், அவரது உடல் நிலையை கண்காணிக்க மருத்துவ உபகரணங்கள் வழங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோக, பகவத் கீதா, ராமாயணம் மற்றும் ஹவ் பிரைம் மினிஸ்டர் டிசைட்ஸ் ஆகிய நூல்களையும் தன்னுடன் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications