“அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையாளர் சர்ட்டிபிகேட் ஒரு பயங்கர ஜோக் ” - பாஜக தலைவர் அட்டாக்!
டெல்லி : சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லி சுகாதார அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இது அரசியல் உள்நோக்கத்துடன் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் கர்நாடகாவில் விவசாய சங்க நிதியை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட கோடிஹள்ளி சந்திரசேகர் ஆம் ஆத்மியில் இணைந்ததை விமர்சித்து பாஜக தலைவர் அமித் மால்வியா கெஜ்ரிவாலை சாடியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையாளர் சான்றிதழ் நகைச்சுவையானது என பாஜக தலைவர் அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கைது
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் டெல்லி சுகாதார அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜ.க தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது அரசியல் உள்நோக்கத்துடன் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. சத்யேந்தர் ஜெயின் மீதான குற்றச்சாட்டில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால், சத்யேந்தர் ஜெயினுக்கு ஆதரவாகப் பேசி வருவதை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 16 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுபவரை முதல்வர் ஏன் ஆதரிக்கிறார். குற்றவாளிகளுக்கு ஒரு போதும் துணை போகாதீர்கள், அது உங்களுக்கு நல்லதல்ல என ஸ்மிருதி இராணி அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்தார். கர்நாடகாவை சேர்ந்த கோடிஹள்ளி சந்திரசேகர் ஆம் ஆத்மியில் இணைந்ததையும் பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.

கோடிஹள்ளி சந்திரசேகர்
கர்நாடக மாநிலத்தில் விவசாய சங்க தலைவராக இருந்து வந்தவர் கோடிஹள்ளி சந்திரசேகர். விவசாய சங்கத்தின் நிதியை முறைகேடு செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து அவர் மாநில விவசாய சங்க தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய தலைவராக பசவராஜப்பா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கோடிஹள்ளி சந்திரசேகர், சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

இது ஒரு ஜோக்
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக ஐ.டி விங் தலைவர் அமித் மால்வியா, அரவிந்த் கெஜ்ரிவால், கோடிஹள்ளி சந்திரசேகரை ஆம் ஆத்மி கட்சியில் சேர்த்தார். இவர் விவசாயிகள் தொடர்பான பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர். கடந்த 2021ல் கர்நாடக போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர் போராட்டத்தை வாபஸ் பெற ரூ.35 கோடி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதை ஒரு தொலைக்காட்சி வெளியிட்டதையடுத்து, அவரை விவசாய சங்கத்தினர் வெளியேற்றினர். கெஜ்ரிவாலின் நேர்மையானவர் சான்றிதழ் நகைச்சுவையானது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications