அத்தனையும் "ஜூம்லாஸ்!" பெட்ரோல் டீசல் விலை குறைப்பை புள்ளி விவரத்துடன் சாடும் காங்கிரஸ்
டெல்லி: நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், இதைக் காங்கிரஸ் கடுமையாகச் சாடியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில காலமாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகமாகவே இருந்தது. இதன் காரணமாக நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்தது.
பேரறிவாளன் உட்பட 7 பேரும் குற்றவாளிகள்தான்.. நிரபராதிகள் மாதிரி ஸ்டாலின் கொண்டாடுகிறார்: அண்ணாமலை
இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
வரி குறைப்பு
இந்தச் சூழலில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படுவதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். மத்திய அரசு தனது வரியைக் குறைத்துள்ள நிலையில், அனைத்து மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மாநில அரசுகள்
இது குறித்து பாஜக அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது ட்விட்டரில், "கடந்த நவம்பர் மாதம் வரி குறைக்கப்பட்டது.இது பிரதமர் மோடி மக்களின் மீது வைத்திருந்த அக்கறையைக் காட்டியது. மேலும், பிரச்சினை ஏற்படும் போது, அதைத் தீர்க்க அவரது தலைமைப் பண்பைக் காட்டுகிறது. இப்போது மத்திய அரசு கலால் வரி 2வது முறையாக குறைத்துள்ளது. இருந்த போதும், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ஆந்திரா, ஜார்கண்ட், கேரளா போன்ற மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பாஜக ஆளும் மாநிலங்களை விட ₹ 10-15 அதிகமாக உள்ளது," என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ்
இருப்பினும், இந்த விலை குறைப்பு அறிவிப்பைக் காங்கிரஸ் கடுமையாகச் சாடி வருகிறது. மிகக் குறைவான தொகை மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்த விலை குறைப்பு மிகவும் குறைவானது என்றும் மத்திய அரசு மக்களை முட்டாளாக்குவதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 60 நாட்களுக்கு முன்பு இருந்த விலையை ஒப்பிட்டு, "நாட்டின் மக்களைப் போலியான தகவல்களைக் கொண்டு ஏமாற்றத் தேவையில்லை" என்று விமர்சித்துள்ளது.
அட்டாக்
மேலும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவும் இந்த அறிவிப்பைச் சாடியுள்ளார். மத்திய அரசின் இந்த விலை குறைப்பு அறிவிப்பை அவர் "ஜூம்லாஸ்" என்று சாடியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "அன்புள்ள நிதியமைச்சரே, மே 2014இல், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ₹ 9.48ஆக இருந்தது. அதுவே மே 21, 2022இல் பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 27.90ஆக உள்ளது. நீங்கள் இப்போது இதை ₹ 8 குறைத்துள்ளீர்கள். பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ₹ 18.42 உயர்த்திவிட்டு, இப்போது ₹ 8 குறைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் காலத்தில் ரூ 9.48ஆக இருந்த வரி இப்போது ரூ 19.90ஆக உள்ளது" என்று சாடியுள்ளார்.