மேனகா நான் உயிரோடு இருக்கிறேன்.. லடாக்கிலிருந்து மனைவிக்கு போனில் இன்பஅதிர்ச்சி கொடுத்த இந்திய வீரர்
டெல்லி: நான் உயிருடன்தான் இருக்கிறேன் என சீன தாக்குதலில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்பட்ட ராணுவ வீரர் தொலைபேசியில் தனது மனைவியிடம் பேசியதால் அந்த கிராமமே உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு இந்தியா- சீனா ராணுவத்தினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் ராணுவ அதிகாரி உள்பட 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
மேலும் 4 பேர் கவலைக்கிடமான வகையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். லடாக்கில் இருந்த இந்திய ராணுவத்தினர் பலர் ரெஜிமெண்ட்டில் பணியாற்றியவர்கள் ஆவர். எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்த நிலையில் இரு நாட்டு படையினரும் எல்லை பகுதியில் தங்களது படைகளை விலக்கிக் கொண்டனர்.
திருப்பி அனுப்புங்கள்.. சீனா சிறைபிடித்த 10 இந்திய வீரர்கள்.. அதிரடியாக மீட்பு.. எப்படி நடந்தது?
புறக்கணிக்க
இந்த நிலையில் சீன ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிராக இந்தியாவில் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டி பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
சீன ராணுவத் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்பட்ட ராணுவ வீரர் ஒருவர் அவரது வீட்டிற்கு தொலைபேசியில் தான் உயிருடன் இருப்பதாக கூறிய இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பீகார் மாநிலம் சரண் மாவட்டம் பார்சா தொகுதியிஸ் உள்ள திக்ரா கிராமத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் சுனில் குமாட். இவர் திங்கள்கிழமை இரவு நடந்த தாக்குதலில் இறந்ததாக கூறப்படுகிறது.
அச்சம்
ஆனால் வேறு வீரருக்கு பதிலாக இவரது பெயர் தவறாக இடம்பெற்றுவிட்டதாக தெரிகிறது. சுனில் உயிரிழந்ததாக அவரது சகோதரர் அனிலுக்கு ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த புதன்கிழமை பிற்பகல் சுனில் நலமாக இருப்பதை உறுதிப்படுத்தினர். எனினும் சுனிலின் குரலை போன் மூலம் கேட்கும் வரை குடும்பத்தினர் அச்சத்திலேயே இருந்தனர்.
மறுமுனை
சுனிலின் மனைவி மேனகாவுக்கு ராணுவ பிரிவினர் மூலம் தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது மறுமுனையில் அவரது கணவர் பேசினார். இதனால் மகிழ்ச்சி அடைந்தார் மேனகா. இதுகுறித்து அவர் கூறுகையில் ரோஷினியின் தந்தை (சுனில் மகள் ரோஷினி) மறுமுனையில் போனில் பேசியதை கேட்டவுடன் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.
மகிழ்ச்சி
முன்னதாக சுனில் இறந்ததாக கூறப்பட்ட தகவலை அடுத்து எம்எல்ஏ சந்திரிகா ராய் உள்பட ஏராளமானோர் மேனகாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூற வீட்டுக்கு வந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் சுனில் உயிருடன் இருக்கும் தகவலை அடுத்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.