அரவிந்த் சுப்பிரமணியன், பிரதாப் மேத்தா பதவி விலகல்: குறைபாடுகளை ஒப்புக்கொண்ட அசோகா பல்கலைக்கழகம்!
டெல்லி: அசோகா பல்கலைக்கழகத்தில் சில குறைபாடுகள் உள்ளதாகவும், அதனை சரி செய்ய நாங்கள் முயல்வோம் என்றும் அசோகா பல்கலைக்கழகம் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த அரசியல் நிபுணர் பிரதாப் பானு மேத்தாவும், முதன்மைப் பொருளாதார ஆலோசகருமாக விளங்கிய அரவிந்த் சுப்பிரமணியனும் சமீபத்தில் பதவி விலகினார்கள்.
ஹரியானா மாநிலத்தில் சோனிபட் நகரத்தில் அமைந்திருக்கும் அசோகா பல்கலைக்கழகம் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.
அசோகா பல்கலைக்கழக சர்ச்சை
இந்தப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை பேராசிரியராக இருந்த பிரபல பொருளாதார நிபுணரும், இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகருமாக விளங்கிய அரவிந்த் சுப்பிரமணியன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு முன்னதாக இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த பிரதாப் பானு மேத்தாவும் பதவி விலகினார்.
பிரதாப் மேத்தா விலகினார்
மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் பற்றிய தனது விமர்சனங்களை பிரதாப் மேத்தா எழுதி வந்தார். இதனால் அவருக்கு மத்திய அரசு மூலம் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக அவர் பதவி விலகியதாகவும் கூறப்படுகிறது. பல்கலைக்கழக பேராசிரியர்களும், மாணவர்களும் பிரதாப் மேத்தாவுக்கு ஆதரவாக இருந்தனர். இதனை தொடர்ந்துதான் பிரதாப் மேத்தாவுக்கு ஆதரவாக அரவிந்த் சுப்பிரமணியன் பதவியை ராஜினாமா செய்தார்.
குற்றத்தை ஒப்புக் கொண்ட பல்கலைக்கழகம்
இந்த நிலையில் அசோகா பல்கலைக்கழகத்தில் சில குறைபாடுகள் உள்ளதாகவும், அதனை சரி செய்ய நாங்கள் முயல்வோம் என்றும் அசோகா பல்கலைக்கழகம் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த கூட்டறிக்கையில் பல்கலைக்கழக வேந்தர் ருத்ரங்ஷு முகர்ஜி, துணைவேந்தர் மலபிகா சர்க்கார், பிரதாப் பானு மேத்தா, மற்றும் பல்கலைக்கழக அறங்காவலர் குழுவின் தலைவர் ஆஷிஷ் தவான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
குறைபாடுகளை சரி செய்வோம்
அசோகா பல்கலைக்கழக நிறுவன செயல்முறைகளில் சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், அவை அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்து சரிசெய்ய நாங்கள் முயற்சிப்போம்.இது கல்வி சுயாட்சி மற்றும் சுதந்திரத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும். இது எப்போதும் அசோகா பல்கலைக்கழக கொள்கைகளின் மையத்தில் உள்ளது. பிரதாப் பானு மேத்தா மற்றும் அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோர் அசோகா பல்கலைக்கழகம் தாராளவாத பார்வை மற்றும் கல்வி சுதந்திரம் மற்றும் சுயாட்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.