முஸ்லிம்களை சுடும் அசாம் பாஜக முதல்வர்.. சர்ச்சையை கிளப்பிய AI வீடியோ! எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு
டெல்லி: அசாம் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை அம்மாநில பாஜக அரசு கையில் எடுத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இப்படி இருக்கையில் அசாம் மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்யப்பட்ட வீடியோ ஒன்று சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
அசாம் மாநிலத்திற்குள் வங்கதேசத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று அம்மாநில பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. இப்படி இருக்கையில், பாஜக பகிர்ந்திருந்த வீடியோவில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, இஸ்லாமியர்களை குறி வைத்து சுடுவதை போன்று சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வீடியோ, சிறுபான்மையினரை குறிவைத்து நிகழ்த்தப்படும் படுகொலையை பெருமைப்படுத்துவது போல் உள்ளது என காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது. "இது அருவருக்கத்தக்கது, அதிர்ச்சியூட்டக்கூடியது. இது வன்முறை மற்றும் இனப்படுகொலைக்கான அழைப்பு. கடந்த காலங்களில் வெறுப்பைக் கொண்டிருந்த இந்த பாசிச ஆட்சியின் உண்மையான முகம் இதுதான்" என காங்கிரஸ் சாடியுள்ளது.
சமூகத்தில் பிளவையும், நஞ்சையும் பரப்பும் இந்தச் செயலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது. இந்த விவகாரத்தில் பிரதமரிடம் இருந்து கண்டனம் எதையும் எதிர்பார்க்க முடியாது என தெரிவித்த அக்கட்சி, "உச்ச நீதிமன்றம் உறுதியாக இதில் தலையிட வேண்டும்" என்றும் கோரியது.
கண்டனங்கள் வலுத்த நிலையில், கொஞ்ச நேரத்திலேயே அந்த பதிவு எக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து அஸ்ஸாம் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ரஞ்சிப் குமார் சர்மாவிடம் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' விசாரித்தபோது, "இது குறித்து பேச எதுவும் இல்லை. அந்த வீடியோ நீக்கப்பட்டுவிட்டது, சொல்வதற்கு எதுவும் இல்லை" என்றார். பாஜகவின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் பிஸ்வஜித் கவுண்டும் கருத்து தெரிவிக்க மறுத்தார்.












Click it and Unblock the Notifications