பக்கவிளைவு.. அதிரவைத்த ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி.. இந்தியாவில் என்ன நிலை.. சீரம் பதில்!
டெல்லி: ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசியின் உலக அளாவிய சோதனை நிறுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக இந்தியாவில் அந்த தடுப்பூசியை சோதித்து வரும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.
கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 10க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு அவை மருத்துவ பரிசோதனையில் உள்ளன.
இதில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி குறித்து உலகம் முழுவதும் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வழங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் - சோதனைக்குட்படுத்தப்பட்டவருக்கு உடல் நலக்குறைவு!
நம்பிக்கை தந்த தடுப்பூசி
ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. அடுத்த ஆண்டு சந்தையில் மக்களுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் முதல் 2 கட்ட சோதனைகளை வெற்றிகரமாகக் கடந்து வந்ததுவிட்டது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி. இந்த தடுப்பூசி அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 30,000 தன்னார்வலர்களுக்கு சோதனை செய்து பார்க்கும் 3ம் கட்ட சோதனை நிலைக்கு வந்துள்ளது. இதனால் இந்த தடுப்பூசி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
முதுகு தண்டவட பாதிப்பு
ஆனால் திடீர் திருப்பமாக இந்த வாக்சின் மீது நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் இங்கிலாந்தில் சோதனையில் பங்கேற்ற ஒருவருக்கு மிகவும் சீரியஸான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சோதனையில் பங்கேற்ற நபருக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு (transverse myelitis) ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவர் நோயில் இருந்து மீண்டுவருவதாக கூறப்படுகிறது. ஆனால் ஆக்ஸ்போர்டு நிறுவனம் எந்த மாதிரியான பாதிப்பு காரணமாக சோதனை நிறுத்தப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
சீரம் இன்ஸ்டிடியூட் பதில்
இந்த சூழலில் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி சோதனையின் உலகளாவிய சோதனை இங்கிலாந்தில் நிறுத்தப்பட்டபோதிலும், இந்தியாவில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக இந்தியாவில் அந்த தடுப்பூசியை சோதித்து வரும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. புனோவைத் தலைமையிடமாக கொண்ட சீரம் நிறுவனம் இந்தியாவில் 17 இடங்களில் 18 முதல் 55 வயதுக்குட்பட்ட 1,600 தன்னார்வலர்களை ஆகஸ்ட் 26 முதல் புனேவின் வித்யாபீத் மருத்துவக் கல்லூரியில் பரிசோதித்து வருகிறது.
விரைவில் மறு தொடக்கம்
சீரம் நிறுவனம் இன்று வெளியிட்டிருந்த அறிவிப்பில், நாட்டில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் சோதனைகள் தொடந்து நடந்து கொண்டிருக்கிறது. இங்கிலாந்தின் சோதனைகள் நிறுத்தம் குறித்து எங்களால் அதிகம் கருத்துத் தெரிவிக்க முடியாது. எனினும் அவை மேலும் மதிப்பாய்வு செய்யவே இடைநிறுத்தம் செய்யப்பட்டுளளது. விரைவில் மறுதொடக்கம் செய்யப்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்தியாவில் சோதனைகளைப் பொருத்தவரை, அது தொடர்கிறது, நாங்கள் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை, "என்று தெரிவித்துள்ளது.
சோதனை தொடர கூடாது
இதனிடையே இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டுள்ளதை பார்க்கும் போது இந்தியாவிலும் அந்த ஆய்வை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று டாக்டர் அனந்த் பன், கூறியுள்ளார். சரியான பாதுகாப்பு உறுதி செய்த பின்னர் சோதனை தொடர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.