41 உயிர்களை மீட்ட மீட்பு குழுவினர்.. நெகிழ்ந்து போன ஆஸி. பிரதமர்! அர்னால்ட் டிக்ஸ் குறித்து பெருமை
டெல்லி: உத்தரகாண்ட் சுரங்கத்திலிருந்து 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீட்பு பணியை வெற்றிகரமாக முடித்த இந்திய அதிகாரிகளுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நவ. 12: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், உத்தரகாண்ட்டில் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருந்தது. அதாவது உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின்போது எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கிக்கொண்டனர்.

நிலச்சரிவு: ஷிப்ட் முறையில் வேலை பார்த்து வந்த இந்த தொழிலாளர்களின் ஒரு குழு, ஷிப்ட் முடித்துவிட்டு சுரங்கத்திற்கு வெளியே வந்திருக்கிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து உள்ளே போக முயன்றபோதுதான், இவர்களுக்கு அடுத்த ஷிப்ட் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது நிலச்சரிவு ஏற்பட்டு சில மணி நேரங்களுக்கு பின்னர்தான் 41 தொழிலாளர்களும் தாங்கள் உள்ளே சிக்கிக்கொண்டோம் என்பதை உணர்ந்திருக்கின்றனர்.
மீட்பு பணிகள்: இதனையடுத்து மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் அது அவ்வளவு எளியதாக இருக்கவில்லை. சுரங்கத்தின் முன் பகுதியில் நிலச்சரிவால் குவிந்துள்ள மண்ணை அகற்றி உள்ளே இருப்பவர்களை மீட்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் மண்ணை அங்கிருந்து எடுக்க எடுக்க மேலும் மேலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இப்படியே செய்தால் மொத்த சுரங்கமும் இடிந்து விழும் அபாயம் ஏற்படும். எனவே மாற்று வழியை முயற்சித்தனர். அப்போதுதான் சுரங்கப்பாதை வடிவமைப்பது, அதில் சிக்கியவர்களை மீட்பதில் நிபுணரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த அர்னால்ட் டிக்ஸ் வரவழைக்கப்பட்டார்.
அர்னால்ட் டிக்ஸ்: சுரங்கத்தின் முன் பகுதியிலிருந்து தொழிலாளர்களை மீட்பதை விட, மேலிருந்து அவர்களை மீட்கலாமே என யோசனையை அவர் முன்வைத்தார். இதனையடுத்து சுரங்கத்தின் மேல் பகுதியிலிருந்து துளையிடும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனாலும் அதிலும் சில சிக்கல்கள் இருந்தன. அதாவது, மலையின் பாறை மிகவும் லேசானதாக, உறுதியற்றதாக இருந்தது. எனவே மீண்டும் மண் சரிவு ஏற்படும் அபாயம் எழுந்தது. இதனையடுத்து 17 நாட்களுக்கு பின்னர் ஒரு வழியாக 41 தொழிலாளர்களும் எவ்வித காயமும் இன்றி மீட்கப்பட்டுள்ளனர்.
வெற்றி: இந்த மீட்பு பணியை சாத்தியமாக்கிய மீட்பு குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்திய மீட்பு குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் நாட்டை சேர்ந்த சுரங்கப்பாதை நிபுணரான அர்னால்ட் டிக்ஸ், எண்ணற்ற சவால்களைச் சந்தித்து இரண்டு வாரங்களாக மீட்பு பணியில் தொடர் முன்னேற்றத்திற்கு வித்திட்டிருந்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
பாராட்டு: "41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டது இந்திய அதிகாரிகளின் அற்புதமான சாதனை. அர்னால்ட் டிக்ஸ் இதில் முக்கிய பங்கு வகித்ததை பெருமையாக கருதுகிறேன்" என்று x சோஷியல் மீடியா தளத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications