ஏழு மாநிலங்களில் பறவை காய்ச்சல்... பரவலைத் தடுக்க மத்திய அரசு எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்
டெல்லி: இந்தியாவில் தற்போது வரை ஏழு மாநிலங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பறவை காய்ச்சல் மேலும் பரவாமல் இருப்பதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலே இன்னும் இந்தியாவில் முழுமையாகக் கட்டுக்குள் வராத நிலையில், தற்போது பறவை காய்ச்சலும் நாடு முழுவதும் பரவி வருகிறது. தற்போது வரை உத்தரப் பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய ஏழு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது வரை மனிதர்கள் யாருக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. பறவை காய்ச்சல் பரவலைத் தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கோழி இறக்குமதிக்குத் தடை விதித்த டெல்லி
மற்ற மாநிலங்களிலிருந்து உயிருடன் பறவைகளை எடுத்து வர டெல்லி தடை விதித்துள்ளது. அதேபோல, காசிப்பூரில் உள்ள மாநிலத்தின் மிகப்பெரிய கோழி சந்தையையும் அடுத்த 10 நாட்களுக்கு மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் இருந்து பறவைகளிடம் இருந்து சேகரிக்கப்படும் மாதிரிகள் ஜலந்தர் ஆய்வகத்திற்குச் சோதனைக்கு அனுப்பப்பட்டன. டெல்லியிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அவசர குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பூங்காக்கள் மூடல்
தெற்கு டெல்லியின் ஜசோலாவில் உள்ள ஒரு மாவட்ட பூங்காவில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் குறைந்தது 24 காகங்கள் இறந்து கிடந்தன. மேலும், டெல்லியிலுள்ள சஞ்சய் ஏரியில் 10 வாத்துகள் உயிரிழந்துள்ளன. இதன் காரணமாக இந்த ஏரி மற்றும் மூன்று பொழுதுபோக்கு பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், கால்நடை மருத்துவர்கள் பறவை சந்தைகள், வனவிலங்கு விற்கும் இடங்கள் மற்றும் நீர்நிலைகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Array
அண்டை மாநிலங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வரும் ஜனவரி 15 ஆம் தேதி வரை உயிருடன் உள்ள கோழிகளை மாநிலத்திற்குள் இறக்குமதி செய்ய முழுமையான தடை விதிக்கப்படுவதாகப் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் சுமார் 27 மாவட்டங்களில் 1,100க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்துள்ளன. அங்கும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாவட்டத்திலுள்ள ஒரு கோழி சந்தையில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அச்சந்தை ஒரு வாரம் மூடப்பட்டுள்ளது.
7 மாநிலங்களில் பறவை காய்ச்சல்
சத்தீஸ்கரின் பலோட் மாவட்டத்தில், கடந்த ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில் கோழிகளும் காட்டுப் பறவைகள் மர்மமான சூழ்நிலையில் இறந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்த சத்தீஸ்கர் அரசு குழுக்களை அமைத்துள்ளன. அதேபோல மகாராஷ்டிராவில் ஒரே கோழிப் பண்ணையில் 900 கோழிகள் உயிரிழந்தன. அங்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும், மும்பை, தானே, தபோலி, பீட் மாவட்டங்களில் இறந்து கிடந்த காகங்களின் மாதிரிகள் பரிசோதனைக்காகத் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. கேரளாவிலும் இரு மாவட்டங்களில் பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்
இது குறித்து கால்நடை பராமரிப்பு அமைச்சகம் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதில் தற்போதுள்ள நிலைமையைக் கண்காணிக்கவும் மனிதர்களுக்கு நோய் பரவுவதைத் தவிர்ப்பது குறித்து ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள், பறவை சந்தைகள், பூங்காக்கள், கோழிப் பண்ணைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த பறவைகளைத் தனிப்பட்ட பாதுகாப்ப உபகரணங்களைக் கொண்டு அகற்ற வேண்டும் என்றும் பறவை காய்ச்சல் குறித்துப் பரவும் போலி செய்திகளைத் தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.