அவசியம் இல்லாத வெளிநாட்டு பயணங்களை ஒத்திவையுங்கள்.. பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள்
செகந்திராபாத்: நடுத்தர மக்கள் அவசியமற்ற வெளிநாட்டு பயணங்களை அடுத்த ஓராண்டுக்கு ஒத்திவைக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். தேவையற்ற வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் வெளிநாடுகளில் திருமணம் நடத்துவது போன்றவற்றை தவிர்த்து, இந்தியாவுக்குள் உள்ள சுற்றுலா தலங்களை தேர்வு செய்து அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்க மக்கள் உதவ வேண்டும் என மோடி வேண்டுகோள் வைத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது சர்வதேச அளவிலான பிரச்சினைகளால் மக்கள் பின்பற்ற வேண்டிய சிக்கன நடவடிக்கைகள், எரிபொருள் மிச்சம் செய்ய பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைக்க வேண்டும்
அதேபோல, நடுத்தர மக்கள் அவசியமற்ற வெளிநாட்டு பயணங்களை அடுத்த ஓராண்டுக்கு ஒத்திவைக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி இது தொடர்பாக கூறியதாவது:-
வெளிநாடுகளில் திருமணம் நடத்துவது, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது மற்றும் அங்கு விடுமுறை கழிப்பது போன்ற பழக்கங்கள் நடுத்தர மக்களிடையே அதிகரித்து வருகின்றன. இந்த நெருக்கடியான காலத்தில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைக்க வேண்டும் என்று நாம் முடிவு எடுக்க வேண்டும்.
30 ஆயிரம் கோடி இழப்பு
தேவையற்ற வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் வெளிநாடுகளில் திருமணம் நடத்துவது போன்றவற்றை தவிர்த்து, இந்தியாவுக்குள் உள்ள சுற்றுலா தலங்களையும் உள்நாட்டு விழாக்களையும் தேர்வு செய்வதன் மூலம் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்க முடியும். எனவே இதற்கு மக்கள் உதவ வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
அமெரிக்கா-ஈரான் மோதலின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, கச்சா எண்ணெய் வரத்து குறைவு மற்றும் உலகளாவிய எரிசக்தி சந்தையில் கடும் நிலையற்ற தன்மை ஆகியவை இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் மாதம் 30 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது.
எண்ணெய் விலையின் தாக்கத்தால்
இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமோ என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே நிலவுகிறது. இதற்கு மத்தியில் தான் எரிபொருள் மிச்சப்படுத்துவது தொடர்பாகவும் பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் விநியோகத்திற்கு மிகவும் முக்கியமான கடல் வழித்தடமாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தி கடந்த இரண்டு மாதங்களாக முடக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்த தடையால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எண்ணெய் விலையின் தாக்கத்தால் பல்வேறு இறக்குமதி பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதனால் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் வேகமாக குறைந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான பயணத்திற்காக பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை போர்க்கப்பல்களை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்திக்கு ஏதேனும் போர்க்கப்பல்கள் வந்தால் கடுமையான தாக்குதல் நடத்துவோம் என பிரிட்டன் மற்றும் பிரான்ஸை ஈரான் எச்சரித்துள்ளது.
இதுபோன்ற பதற்றங்களால் அங்கு நிலைமை சீராக நீண்ட காலம் பிடிக்கும் என சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில்தான் பிரதமர் மோடி பல்வேறு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.














Click it and Unblock the Notifications