லெபனான் மீது தரை வழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தம்? ஹை டென்ஷன்.. இந்தியர்கள் வெளியேற உத்தரவு
டெல்லி: லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தமாகி வருவதாக சொல்லப்படுவதால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட டென்ஷன் நிலவுகிறது. இதனால், லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று லெபனானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டுவோம் என்ற சூளுரையுடன் இறங்கியிருக்கும் இஸ்ரேல், காசா நகரில் குண்டு மழை பொழிந்து வருகிறது.

இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பலரும் தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு இருந்து வருகிறது. இஸ்ரேல் மீது அவ்வப்போது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வந்தது.
இந்த சூழலில் கடந்த வாரம் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த நூற்றுக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஒரே சமயத்தில் வெடித்தது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என 37 பேர் பலியாகினர். இந்த தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டுகிறது. இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ராக்கெட் குண்டுகளை வீசி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் அகில் உள்பட பலர் உயிரிழந்தனர். இதனால், டென்ஷன் ஆன ஹிஸ்புல்லா அமைப்பு மீண்டும் இஸ்ரேல் மீது 150-க்கும் அதிகமான ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கினர். இவற்றில் பெரும்பாலானவற்றை இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இதற்கிடையே, லெபனான் மீது தரைவழி தாக்குதல் நடத்த தயாராகுவதாக சொல்லப்படுகிறது. மத்திய கிழக்கில் முழு அளவிலான போர் நடைபெற சாத்தியம் உள்ளதாக ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இஸ்ரேல் தனது வீரர்களிடம் தரை வழி தாக்குதலுக்கும் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையே, லெபனானுக்கு இந்தியர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள இந்திய தூதரகம், ஏற்கனவே லெபனானில் உள்ளவர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications