அயோத்தி வழக்கு: மத நம்பிக்கை அடிப்படையில் இல்லை.. ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு- உச்சநீதிமன்றம்
Recommended Video
டெல்லி: அயோத்தி தீர்ப்பை வழங்கும்போது, தற்போதைய வழக்கின் உண்மைகள், சான்றுகள் மற்றும் வாதங்கள் வரலாறு, தொல்பொருள் ஆதாரங்கள்தான் கருத்தில் எடுக்கப்பட்டதே தவிர, மத நம்பிக்கைகள் அல்ல, என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது.
அயோத்தி தீர்ப்பில் நீதிமன்றம் 1045 பக்க தீர்ப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்த அம்சம் தொடர்பாக என்ன சொல்லப்பட்டிருக்கிறது என பார்க்கலாம்:
வரலாறு, சித்தாந்தம் மற்றும் மதம் தொடர்பான அரசியல் போட்டிகளில் இருந்து சட்டம் தனித்து நிற்க வேண்டும். தொல்பொருள் ஆய்வு குறிப்புகள் நிறைந்த ஒரு வழக்கு இது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இறுதி நடுவர்
ஒவ்வொருவருக்கான, வரம்புகளை நிர்ணயிப்பதன் மூலம், இறுதி நடுவராக இந்த நீதிமன்றம் விளங்கி, குடிமகனின் நம்பிக்கைகள் மற்றொருவரின் சுதந்திரங்கள் மற்றும் நம்பிக்கைகளில் தலையிடவோ அல்லது ஆதிக்கம் செலுத்தவோ இல்லை என்ற சமநிலை உணர்வைப் பாதுகாக்க வேண்டும்.

அரசியலமைப்பு
1947ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதியன்று, ஒரு தேசமாக இந்தியா சுயநிர்ணயத்தை உணர்ந்தது. 1950, ஜனவரி 26ம் தேதியன்று, நமது சமுதாயத்தை வரையறுக்கும் விழுமியங்களுக்கான அர்ப்பணிப்பாக, இந்திய அரசியலமைப்பை உருவாக்கினோம். அரசியலமைப்பின் மத்தியில், சட்டத்தின் ஆட்சியால், சமத்துவம் பேணப்பட வேண்டும் என்ற உறுதி உள்ளது.

சட்டத்திற்கு சமம்
நமது அரசியலமைப்பின் கீழ், தெய்வீகத்தின் வேரைத் தேடும் அனைத்து மதங்கள், நம்பிக்கைகள் மற்றும் குடிமக்கள் சட்டத்தின் முன் சமமானவர்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் ஒவ்வொரு நீதிபதியும் வெறுமனே பணிபுரியவில்லை, ஆனால் அரசியலமைப்பையும் அதன் மதிப்புகளையும் நிலைநிறுத்துவதாக பணியாற்றுகிறார். அரசியலமைப்பு, ஒரு மதத்திற்கும் மற்றொரு மதத்திற்கும் உள்ள நம்பிக்கைகள் இடையே வேற்றுமையை விதைப்பதில்லை. அனைத்து வகையான நம்பிக்கை, வழிபாடு மற்றும் பிரார்த்தனை சட்டத்திற்கு சமம்.

ஆதாரங்கள்
தற்போதைய வழக்கில், இந்த நீதிமன்றம் தனித்துவமான பரிமாணத்தில், தீர்ப்பளிக்கும் பணியைக் கொண்டுள்ளது. ஒரு அசையாச் சொத்து தொடர்பாக வழக்கு உள்ளது. நீதிமன்றம் நம்பிக்கை அல்லது மதத்தின் அடிப்படையில் தீர்ப்பை தீர்மானிக்காது. ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பை வழங்குகிறோம். வழக்கின் உண்மைகள், சான்றுகள் மற்றும் வாதங்கள் வரலாறு, தொல்பொருள் ஆதாரங்கள்தான் கருத்தில் எடுக்கப்பட்டதே தவிர, மத நம்பிக்கைகள் அல்ல. சட்டம் எங்களுக்கு தெளிவான அளவீடுகளை வழங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications