அயோத்தி வழக்கு.. தீர்ப்புக்குப் பிறகும் நல்லிணக்கம் நீடிக்க வேண்டும்.. பிரதமர் மோடி அழைப்பு
டெல்லி: அயோத்தி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அது யாருக்கும் வெற்றியும் இல்லை. தோல்வியும் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி இந்தத் தீர்ப்பு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: தீர்ப்பு எதுவாக இருப்பினும் அது யாருக்கும் தோல்வியும் அல்ல.. யாருக்கும் வெற்றியும் அல்ல. நாட்டு மக்கள் இந்த நாட்டின் மாபெரும் பாரம்பரியம், அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த தீர்ப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
நீதித்துறையின் மாண்பையும், நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு அனைத்து சமூகத்தினரும், சமூக கலாச்சார அமைப்பினரும், அனைத்துக் கட்சயினரும் மக்களிடையே நல்லுணர்வும், ஒற்றுமை உணர்வும் ஓங்கி திகழ முயற்சிகளை எடுக்க வேண்டும். தீர்ப்புக்குப் பிறகும் கூட நம்மிடைய நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்பது எனது ஆசை.
கடந்த சில மாதங்களாகவே இந்த தீர்ப்புக்காக நாடு ஆவலுடன் காத்திருக்கிறது. தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. நாடு அதை ஆவலுடன் பார்த்து வந்தது. இந்த கால கட்டத்தில் நாட்டில் நல்லுணர்வு திகழ அனைத்துத் தரப்பினரும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.