அயோத்தி நில உரிமை வழக்கு: ஷியா வக்பு வாரிய மனு தள்ளுபடி- சன்னி வக்பு வாரிய மனு ஏற்பு!
Recommended Video
டெல்லி: அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் தங்களுக்கு சொந்தம் இல்லை என 1946-ம் ஆண்டு பைசாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஷியா வக்பு வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேநேரத்தில் சன்னி வக்பு வாரியம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி தங்களுக்கு சொந்தம் என்பது ஷியா வக்பு வாரியத்தின் மனு. ஆனால் பாபர் மசூதி இடமான சன்னி வக்பு வாரியத்துக்கு சொந்தம் என 1946-ல் பைசாபாத் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஷியா வக்பு வாரியத்தைப் பொறுத்தவரையில் சன்னி பிரிவை சேர்ந்த மன்னர் பாபரால் இந்த மசூதி கட்டப்படவில்லை. அவரது தளபதிகளில் ஒருவரான ஷியா பிரிவை சேர்ந்தவராலேயே இந்த மசூதி கட்டப்பட்டது என்கிற வாதத்தை முன்வைத்திருக்கிறது.
2010- அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பில், ராம் லல்லா, சன்னி வக்பு வாரியம் மற்றும் நிர்மோகி அகாடாக்கள் ஆகியவைதான் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சமமாக பிரித்து கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது.
பின்னர் உச்சநீதிமன்றத்தில் பைசாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஷியா வக்பு வாரியம் மேல்முறையீடு செய்தது. அதில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்துக்கு உரிமை கோரி மனுவை தாக்கல் செய்தது.
இம்மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இன்று தள்ளுபடி செய்தது. அதேபோல் சர்ச்சைக்குரிய நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோனி அகாடாவின் மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
சன்னி வக்பு வாரிய மனு ஏற்பு
இதனிடையே சன்னி வக்பு வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் வழக்காடும் உரிமை சன்னி வக்பு வாரியத்துக்கு உண்டு எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.