ஆபாச பேச்சு.. லோக்சபாவில் ஆசம் கானுக்கு 'ஆப்பு' உறுதி.. ஒன்று கூடிய அனைத்து கட்சி எம்பிக்கள்
டெல்லி: ஆபாசமாக மற்றும் அருவருப்பாக பீகார் பாஜக எம்பி ரமா தேவி குறித்து பேசிய சமாஜ்வாதி கட்சி எம்பி ஆசம் கானுக்கு எதிராக சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோக்சபாவில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது.
லோக்சபாவில் நேற்று முத்தலாக் தடை மசோதா குறித்து விவாதம் நடந்தது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா அவையில் இல்லை. இதனால் சபாநாயகர் இருக்கையில் பாஜக எம்பியும் துணை சபாநாயகருமான ரமாதேவி அமர்ந்து இருந்தார்.
அப்போது சமாஜ்வாதி கட்சி எம்பி ஆசம் கான் பேசும் போது "நான் உங்களை மிகவும் விரும்புகிறேன், எல்லா நேரத்திலும் உங்கள் கண்களைப் பார்ப்பது போல் உணர்கிறேன்," என்று கூறி ஆரம்பித்தார். இதனால் அவையில் இருந்த எம்பிக்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, ஆசம் கான் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி கூச்சலிட்டனர்.
எம்பிக்களுக்கு கரும் புள்ளி
ஆனால் ஆசம் கான் ரமா தேவியிடம் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இதனிடையே இந்த விவகாரம் இன்று லோக்சபாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, அசிங்கமாக பேசிய அசாம் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் . அவரது பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இவரது பேச்சு அனைத்து எம்பிக்களுக்கும் கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. சபாநாயகர் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நிர்மலா சீதாராமன் கண்டனம்
இதேபோல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அசாம் கான் அருவருப்பாக பேசியுள்ளதாகவும் அவருக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே கூறுகையில், சபாநாயகர் ஓம்பிர்லா அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆசம் கானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி மற்றும் பிஜேடி எம்பி மக்தாப் ஆகியோரும் ஆசம்கானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ஆசம்கான் நாடாளுமன்றத்தில் பெண் எம்பிக்களிடம் மட்டுமல்ல, அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
சஸ்பெண்ட் செய்ய வேண்டும்
இதேபோல் தான் அவையில் இருந்த அனைத்து பெண் எம்பிக்களும் ஆசம் கானின் தரக்குறைவான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேசினர். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எம்பிக்களின் பேச்சுக்களுக்கு பதில் அளித்து பேசுகையில், ஆசம் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் அவரை லோக்சபாவில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனறார்.
லோக்சபாவில் தீர்மானம்
இந்நிலையில் நாடாளுமன்ற விவாரங்கள் துறை அமைச்சர் பிரல்காத் ஜோஷி, விரைவில் ஆசம் கானுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோக்சபாவில் தீர்மானம் நிறைவேற்றலாம் என கூறப்படுகிறது. இந்த மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்படவும் வாய்ப்பு உள்ளது.